4 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
அமைந்த இந்த நாட்டில் வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் விழைந்து வாழ்ந்த பகுதியாக விளங்கியதால், நூலாசிரியர்கள் சிலர் இதனை மறவர் சீமை என்று வர்ணித்துள்ளனர்.
நாட்டுப்பற்று மிக்க நாடோடி இலக்கியம் ஒன்றில் இந்த நாட்டை,
"முப்போகம் விளையும் இந்த சீமை
முசியாத வைகை நதி சேர்ந்த இந்த சீமை
பனங்காடு பெருத்தது இந்த சீமை
பத்துநிலை ஏரிகளும் மெத்த உண்டு
கல்லுப்படாததொரு சோறும் அதிலே
முள்ளுப்படாத மீன் மறவர் சீமை
காசி முதலாக திரிந்தாலும் மறவர்
சீமைபோல ஒரு தேசம் கிடையாது."
இங்ஙனம் சிறப்பாக வர்ணித்துள்ளது.[1]
தொன்மையான காலம் தொட்டு கன்னித் தமிழகத்தில் காவிரிக்கும், வைகை ஆற்றுக்கும் இடைப்பட் குறிஞ்சியும், முல்லையும். நெய்தலும், பாலையும், மருதமும் மயங்கிய ஐந்திணை பகுதிகளில் இவர்கள் மிகுதியாக வாழ்ந்து காலப்போக்கில் பாண்டிய நாட்டின் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் கிழக்கு நோக்கி கடலையும் கடந்து ஈழத்தின் வடபகுதியில் நிலை கொண்டனர்.[2] இன்னொரு பகுதியினர் தெற்கே சென்று, பொருணை ஆற்றையும், பொதிகை மலையையும் அடுத்த வளமான பகுதிகளில் குடியேறினர். இந்த குடியேற்றங்கள் 10 அல்லது 11-ம் நூற்றாண்டுகளில் நடைபெற்றதாக தெரிய வருகிறது.
சேதுபதிகளான செம்பியர்
அங்கெல்லாம் இவர்கள் கோட்டைகள் அமைத்தபாங்கே பின்னர் இவர்களது குடி வழிப்பிரிவுப் பெயர்களாக ஏற்பட்டது. ஆப்பனூர் நாடு, கொண்டையன்கோட்டை, உப்புக்கோட்டை, ஓரிக்கோட்டை, குறிச்சிக்கோட்டை, அகத்தா நாடு, செம்பிநாடு என்பன அந்த முதல் ஏழு பிரிவினர்களது கொடி வழியாகும்.[3] பின்னர் மரம், கிளை, கொத்து என்ற உட்பிரிவுகளும் தோன்றின. அவை (1) மரிக்காகிளை, (2) பிச்சர் கிளை,