பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணமாலையார் இலம்பகம்83



“அந்த யானை பொல்லாதது; அது போனமாதம் தான் பல்லில்லாக் கிழவியின் பற்கள் அத்தனையும் நொறுக்கி விட்டது” என்று பழைய கதையைப் பேசினாள்.

எதிர்பாராத சந்திப்பாகச் சீவகன் அதனைக் கொண்டான். சுண்ணத்தின் வண்ணத்தில் அவள் சுந்தர முகத்தைக் கண்டவன் இப்பொழுது நேரில் கண்டதை எதிர்பார்க்காத சந்திப்பாகக் கொண்டான். யாரோ ஒரு கன்னிப் பெண் அதனால் அவளைக் காக்கக் கருதி யானையை எறிதல் களைக்குக் கடன் என்றுதான் முனைந்தான். அந்தக் கன்னி இவளாகத்தான் வரவேண்டும் என்று எழுதி இருந்ததே அந்த எழுத்தைத்தான் மீண்டும் மீண்டும் வாசித்தான்; அவள் கழுத்தை அந்த யானை நெரித்து இருந்தால் என்னவாகி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தான். அவள் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாகி இருப்பாளே என்று தவித்தான்.

வீணையில் தத்தையை வென்றதை அவன் விறலாகக் கொள்ளவில்லை. யானையை அடக்கி அவளைக் காத்ததே வெற்றி என்று நினைத்தான். அவள் பார்த்த மோனப் புன்னகையில் அவள் எத்தனை எண்ணங்கள் பொதித்து வைத்தாள் என்று எண்ணிப் பார்த்தான். நோய் நோக்கு விளைவித்தவள் அது தீரும் மருந்தும் அவள் நோக்கே என்று வள்ளுவம் பாடினான்.

அந்த யானையின் கூரிய கொம்பினைவிடத் திரையிட்டு மறைத்துவைத்த வம்பே கூரியது என்று எண்ணத் தொடங்கினான். மதங்கொண்ட யானைக்கு அவள் அணிந்திருந்த கச்சு முகபடாம் என்று கருதினான். அந்தக் கச்சு மட்டும் இல்லை என்றால் தன் நெஞ்சு தன்னிடம் மிச்சம் பட்டிருக்காது என்று நினைத்துப் பார்த்தான்.