146
சுயம்வரம்
மதனாவின் காதில் அவன் குரல் விழவில்லையோ என்னவோ, அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை; அருணாதான் திரும்பிப் பார்த்தாள்.
அதைக் கவனித்த மாதவன், "அருணா! ஓ, அருணா" என்று அவளையும் சேர்த்து அழைத்தபடி, "ஓல்டான், ஓல்டான்!" என்றான்.
பலன்? - வண்டி நிற்கவில்லை . மாறாக, அதன் வேகம்தான் வர வர அதிகரித்தது!
'இந்த அருணா ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்? மதனாவை இவள் எங்கே அழைத்துச் செல்கிறாள்?'...
ஒன்றும் புரியவில்லை மாதவனுக்கு; நின்ற இடத்தையே ஒரு கணம் சுற்றிச் சுற்றி வந்தான். மறு கணம் சாலையோரத்தில் இருந்த தெரு விளக்கு ஒன்று 'இதோ பார்!' என்பது போல் தனக்குக் கீழே கிடந்த ஒரு 'விசிட்டிங் கார்'டை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது; குனிந்து அதை எடுத்தான்.
ஒரு பக்கத்தில் முன்னாள் நீதிபதி சத்தியநாதனின் வீட்டு முகவரி; இன்னொரு பக்கத்தில் ஆனந்தனின் கையெழுத்து...
'அப்படியும் இருக்குமா?'...
அதைப் பார்த்ததும் இப்படி ஒரு கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.
அதற்கு மேல் அவன் தயங்கவில்லை; தாமதிக்க வில்லை. அவனும் ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு தனக்கு முன்னால் செல்லும் டாக்சியை விரட்டி மடக்கி நிறுத்தச் சொன்னான். ஆனால் அந்த டாக்சியை விரட்டிப் பிடிப்பது அவ்வளவு சுலபமாயில்லை!