பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஔவை துரைசாமி

107


வெற்றி பெற்றீர்களோ என ஐயுற்றுப் பிதற்றுவர்; இவ்வாறு பலப்பல சொல்லிப் பழிப்பர்.

தலைவன் :- ஏன்? நீங்களும் மனையிலுள்ள பிறரும் அவ்வாறு அலர் உண்டாகாதவாறு செய்யலாமன்றோ?

தோழி :- உலைவாயை மூடலாம்; ஊர்வாயை மூடலாமோ?

தலைவன் :- உண்டோ , முயன்றால் முடியாப் பொருள்?

தோழி :- என்ன சொல்கின்றீர்கள்.

“செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்
பொய்யாதல் யான்யாங்கு அறிகோம் மற்று ஐய!
அகல்நகர் கொள்ளா அலர் தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகன் அல்லை மன்ற இனி."

(கலி - 19)

தலைவன் :- (முறுவலித்து) தோழி! நீ ஏன் வெகுள்கின்றாய்?

தோழி :- ஐய! நீங்கள் அன்று செய்தவற்றையும் இன்று செய்வதையும் பார்க்கின் இப்போது அவை . எல்லாம் பொய்யே என்பது வெளிப்படை. பொய்கூறி ஒழுகுபவன் மகனா (மனிதனா)?

தலைவன் :- நீ தலைமகள்பால் கொண்ட காதலால் இவ்வாறு பேசுகின்றாய். நான் அதற்கு மகிழ்கின்றேன். ஆனால் -

தோழி :- "ஆனால்" என்பது என்ன?

தலைவன் :- வினை செய்ய வேண்டியவிடத்து அதைச் செய்யாது விடுபவன் மனிதனாகான். 'செய்யத் தக்க செய்யாமையானுங் கெடும்; அல்ல செய்யவும் கெடும்.' இது நீ அறியாததல்லவே! மேலும் காதலரைப் பிரிந்து ஒரு காரியம் செய்து வந்த வழி, அவர் காதல் மாண்புறுமே தவிர, வேறு ஒன்றும் உண்டாகாது. நான் சென்று வருகின்றேன்.

தோழி :- (நெடிது நினைந்து) ஐய,