பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

169


என்று வேண்டினர். அவனும் அவ்வண்ணமே செய்து அறவாழ்க்கையில் நிலை பெறுவானாயினான். அவனது வையாவி நாட்டின் புகழ் விசய நகர வேந்தர் காலம் வரைத் தமிழகத்தில் சிறந்து நின்றது: அக் காலத்தில் வையாவி வையாபுரி எனச் சிதைந்து பெரும் பிறிதாகி மறைந்தது. நிற்க, கோவலன் மனைவியாகிய கண்ணகியார் தம் கணவன் சிலம்பு திருடிய கள்வன் என்று பழி தூற்றப்பட்டுப் பாண்டி வேந்தனால் கொலையுண்டான் என்பது கேட்டு அதனால் தம் செல்வக் குடிக்குண்டான புகழ் மாசுபடுவது நினைந்து வேந்தன் முன்சென்று வழக்குரைத்த வரலாறு நாடறிந்த தொன்று.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் போர் மறத்துக்குப் பெயரும் மாண்பும் பிறங்கப் பெற்றவர். கிரேக்க, பாபிலோனிய எகிப்திய மகளிரைப் போலத் தமிழ் மகளிர் போர்ப் புகழைப் பெரிதும் விரும்பினர். போரில் புறங்கொடுத்துக் குடிக்குப் பழி விளைத்தான் தன் வயிற்றிற் பிறந்த மகன் எனின் அவளது மறவுள்ளம் சிறிதும் பொறாது. போருக்குச் சென்றிருந்த இளையோன் ஒருவனைப் பற்றி அவன் தாயிடம் போந்து பொய்யாக, “அன்னாய், நின்மகன் பகைவர் தொடுத்த போரில் முகுது தந்து ஓடினன்” என்று ஊரவர் அலர் கூறினர்; அது கேட்டதும், அவன் தாயின் மறவுள்ளம் கொதித்தது; “ஊரவர் கூறுவது உண்மையாயின், அவன் வாய் வைத்துப் பாலுண்ட என் மார்பை அறுத்தெறிவேன்” என்று வஞ்சினம் கூறிப் போர்க்களம் சென்று அங்கே இறந்து கிடக்கும் வயவர் உடலங்களைப் புரட்டிக் காணலுற்றாள். அவற்றின் இடையே, முதுகிற் புண்படாது முகத்திலும் மார்பிலும் புண்பட்டுச் சிதைந்து வேறுபட்டுக் கிடந்த அவன் உடம்பினைக் கண்டு பேருவகை கொண்டாள். இதனைக் காக்கை பாடினியார் என்ற பெருமாட்டி,

“முதியோள் சிறுவன்

படையழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின், உண்டஎன்
முலையறுத் திடுவென் யான்எனச் சினைஇக்
கொண்டவாளொடுபடுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணுஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.”