பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

81


தாய்ப்புள்:- (நகைத்து) ஆம்! ஆயினும், விரிகதிர்ச் செல்வனை நாம் நாளை காண்டல் கூடும். இஃதுண்மை! நிற்க, இக்காலத்துப் பகற்பொழுது குன்றிவருதலை நீவிர் அறிந்திலீர் போலும்! இன்றெழுந்த புயலே இப்பகற் பொழுதினைக் குறைத்தது; ஆதலாற்றான், செஞ்ஞாயிற்றின் வெங்கதிரும், இம் முகில்வழி நுழைந்து வெயிலெறித்தல் கூடாது போயிற்று. இதுகிடக்க. இத் தலைப்பெயல் நம் குடம்பை முற்றும் ஈரஞ்செய்திற் றின்றாகலின், உள்ளே வம்மின் குளிர்ப்பு நீங்க, யான் அப் பெரும் பெயர்ச் செலவின்மேற் பாட்டொன்று பாடுகின்றேன். பேதையிர், நீவிர் இப் பகற் பொழுதே என்றும் காண்டல் கூடு மென நினைக்கின்றீர்கொல்லோ?

இந் நிலவுலகின் காட்சிநலனைத் தூக்கி யுரைத்த சிறுபுள் முன்போந்து, "அன்னாய்! யான், பண்டு, என்றும் காண்டல் கூடு மென்றே எண்ணினேன், நினைத்தேன்; மற்று, இன்றே யான் அதன்கண்ணும் திரிபுண்மை கண்டேன். ஆயினும் யான் அதற்கு இனி அஞ்சேன் பருதி பரவை படிய, கருமுகில் பெரு மழை பொழிய, வானங் கருக, கான்யாறு பெருகின் வரும் நோய்தீர் மருந்தும் அறிந்துளேன். அது, நாம் அடைய விரும்பும் அறியாவுலகின் ஆய்ந்த நல்லிசை.

கேட்ட தாய், உவகை கிளர்ந்தெழ, நுனிக்கொம்ப ரேறி, கேட்கும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் உள்ளிட்ட யாவும் மெய்பணிக்கும்வண்ணம், தேம்பிழிபோலும் இன்னிசை மிழற்றிற்று. அதுகாலை, அதனோடு சேவற்புள்ளும், சிறுபுள்ளும் ஒத்திசைத்து உவகைத்தேன் சுவைத்தன. யாவும் ஒத்திசைத்தன வெனினும் ஒன்றுமட்டில் அந்தோ உளம் ஒருப்படாது, உவகையுங் கூராது வெறுத்த நோக்கொடுநிற்ப, இசைப்பெருக்கு நின்றது. நிற்றலும் அது, ஏனைச் சிறுபுட்களை விளித்து, "இவ்விசை, இதனினும் பத்தடுத்ததாம், அதனுட் கூறப்பெறும் உலகுபற்றிய யாவும் உள்ளவாறு உணரப்பெறின்" என்றது. இவ்வாறே, பிரிவு காரணமாகத் துயருற் றிருந்த பெடைச்சிறுபுள்ளொன்று, நகைத்து, "அதனைப் பற்றி நாம்

செ-6