பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

செயலும் செயல் திறனும்



தன் கைத்து (கையில்) ஒன்று (ஓரளவேனும்) உண்டு ஆகச் செய்வான் வினை - என்று அவர் கூறும் சொல்லடுக்குகளைக் கவனித்தல் வேண்டும்.

வினைக்குப் பொருள் மிகவும் தேவையான ஒன்று என்பதை எல்லாரும் அறிந்திருப்பர். ஆனால் அப்பொருள், எவ்வெவ்வகையில், எஃது எதற்காக, எவ்வளவில் தேவை என்பதைப் பலர் சரியாக உணர்ந்திருக்க இயலாது. பொருளால் இவ்வுலகத்து எல்லாவகையான வினைகளையும் செய்து கொள்ளவியலும் என்பதை எல்லாரும் முழுமையாக உணர்ந்திருப்பர் என்று கூறிவிட முடியாது. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை", என்பது திருக்குறள். அஃது இவ்வுலகம் பொருள் அடிப்படையான பொருள் உலகம் . பொருள் என்பது பணம் மட்டுமே என்று பொருள் படாது. பொருள் மதிப்புடைய அனைத்து உடைமைகளும் பொருளே. இருப்பினும் பொருள் என்னுஞ் சொல் பேரளவில் பணத்தைத் தான் குறிக்கும்.

3. பொருளென்னும் பொய்யா விளக்கு

பொருள் இருந்தால் இடம், காலம், பகை, பொய் முதலிய அனைத்தையும் வெல்லலாம் என்பார் திருவள்ளுவர்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.

(753)

இப்படிக் கூறுகையில் திருவள்ளுவர் கூறும் அற நுட்பத்தை நாம் நன்கு உணர்தல் வேண்டும். பொருளைக் கொண்டு தீமையான பண்புகளைத் தான் ஒழிக்க வேண்டுமே தவிர, நன்மைப் பண்புகளை ஒழிக்க பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்னும் குறிப்பை இக்குறள் தெரிவிக்கிறது. பொருளைப் பொய்யா விளக்கம் அஃதாவது பொய்யாதது, மெய்ம்மையானது என்றும், ஒளி பொருந்தியது என்றும் அதன் தன்மையை அவர் கூறுவதும், இருளறுக்கும் அஃதாவது இருளை விரட்டும் என்று அதன் பயனைக் கூறுவதும் நோக்கத்தக்கன. எண்ணிய தேயத்துட் சென்று, என்பதால், விரைவும், அதன் ஆளுமைக்குத் தொலைவு ஒரு தடையில்லை என்பதும் விளங்கும். எனவே, பொருள் நல்லவினைக்காகவே, நல்ல நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப் பெறுதல் வேண்டும் என்பதும், அவ்வகையில் அதற்கீடானது அதுவே என்பதும் திருக்குறள் கருத்தாகும். பொருள் - அதுவும் அளவு சிறியதாயினும் நம் கையிலுள்ள பொருள் - வினைக்கு முதல் இன்றியமையாதது. என்பதை உணர்ந்து கொள்க. அடுத்து, வினைக்குத் தேவையாகும் என்று அவர் கூறும் கருவியைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.