பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

67



கவிழுகின்றன! அவற்றால் பலர் உயிர்களை இழக்க நேரிடுகின்றது. தொழிலாளர்கள் சிலர் தாங்கள் புழங்கும் கைக்கருவிகளைச் சரியாகவே வைத்திருப்பதில்லை. சரியாகச் சாணை பிடிக்காத கத்தரிக்கோல்களை வைத்துக் கொண்டு முடிவெட்டுகிறவர் நம் முடியை வெட்டும் பொழுது எத்தனை முறை முடி சுள் சுள் என்று இழுக்கப்படுவதை உணர்ந்திருக்கிறோம். தெருவில் வைக்கப்பெறும் ஒலி பெருக்கிகள் அவற்றின் இயக்கக் கருவிகள் சரிவர இல்லாமையால், அவற்றினின்று ஒலிப்பரப்பப் பெறும் பாடல்கள் நாம் கேட்க எத்துணை கொடுமையாக இருக்கின்றன. தாம் ஒட்டிச் செல்லும் வண்டிகளைப் பெரும்பாலார் சரிவர ஒட்டாமல் கவனக்குறைவாக இருப்பதால் சாலைகளில் எத்தனை மோதல்கள் ஏற்படுகின்றன!

அதிகாரிகள் கட்டிய அணைக்கட்டுகள் உடைவதும், வீடுகளின் கூரைகள் சரிவதும் எதனால்? கருவிகளைச் சரியாகக் கவனம் செலுத்திக் கையாளாமையால்தானே அமைச்சர்கள் அரசுக் கருவிகளாகிய அதிகாரிகளைச் சரிவரக் கவனிக்காமல் போவதால்தானே, அரசுக்குப் பல கோடி உருபாக்கள் இழப்பேற்படுகின்றன! கருவிகள் சரிவரப் பேணப்படாமையால் தொழிற்சாலைகளில் ஏற்படும் கோளாறுகள் கொஞ்சமா?

8. அறிவுக் கருவி

இனி, கருவிகளைப் பற்றி எண்ணுகையில், முதல் கருவியாகிய கைகளை விட, அக்கைகளில் உள்ள துணைக் கருவிகளை விட, மூலக்கருவியாகிய அறிவுக் கருவியே முதலில் வேண்டப்படுவது என்பதைத் தெளிதல் வேண்டும். அறிவு என்னும் கருவியே அனைத்து வினைகளுக்கும் அடிப்படையாகிய மூலக் கருவி அறிவு அற்றம் (இறுதி) வராமல் காக்கும் கருவி (421) என்பார் பேராசான். "அறிவுடையார் எல்லாம் உடையார்” (430) என்பதும் அவரின் வாய்மொழி. அறிவுத் தெளிவில்லாத ஒருவனிடம் பொருள்கருவி இருந்து என்ன பயன்? ஒருவனுக்குக் கைகளோ கால்களோ வேறு பொறிகளோ இருந்தும், அவற்றைச் சரியான வழியில் பயன்படுத்தத் தெரியும் அறிவில்லாமல் இருப்பானாயின் அக்கருவிகள் பயன்படுவது எங்ங்ன்? மூலக் கருவியாகிய அறிவு ஒருவனிடம் இயல்பாக அமைந்துவிடின், அவன் தன் வினைக்கான கருவிகளைத் தானே தேடித் தேர்ந்து கொள்ள முடியும் அன்றோ? எனவே, கருவிகள் இல்லாமற் போயினும் ஒருவனுக்கு அறிவும் அதன் உந்துதலாகிய ஊக்கமும் இருப்பின் அன்றோ அவன் வினைகளுக்குப் பயனுடையவனாக இருத்தல் இயலும்.

9. உடல்குறை குறையன்று ஊக்கம் தேவை

இயற்கையிலேயே சிலர்க்கு முதல் கருவிகளாகிய ஐம்பொறிகளுள்