பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

99

சிவஞானத்தேவரின் மகனும் புதுமடம் கிராமத்தில் உள்ள தனது தங்கை வீராயியின் மகனுமான முத்து இராமலிங்கத்தை 24.5.1847-ல் தனது வாரிசாக ஏற்றிருந்தார்.

VI துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி

ஐந்து வயது பாலகரான இந்த முத்துராமலிங்கத்தை இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் தனது மகனாகவும். இராமநாதபுரம் சீமை மன்னராகவும் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், இராணியாரது உறவினர்களும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், அவரது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. தங்களது ஒப்புதல் இல்லாமல் இந்தச் சிறுவனது சுவீகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால் அதனை அவர்கள் ஆட்சேபணை செய்து பல வழக்குகளை மதுரை, சென்னை வழக்கு மன்றங்களில் தாக்கல் செய்தனர். இறுதியாக மன்னரது சார்பாக இங்கிலாந்து நாட்டு லண்டன்மாநகரப் பிரிவி கவுன்சில் அளித்த சாதகமான தீர்ப்பினைக் கொண்டு இளைஞர் முத்துராமலிங்கம் சேது நாட்டின் மன்னராக அங்கீகரிக்கப்பட்டார்.

இந்த மன்னர் இளமைக்காலத்தில் மிகவும் மந்தமாகவும், அரசியல் அலுவல்களில் சிறிதும் அக்கரை இல்லாமலும் இருந்து வந்தார். ஆனால் அதே சமயத்தில் இந்த இளைஞர் இயல் தமிழின் இலக்கண, இலக்கியங்களிலும், இசைத் தமிழின் இராகம், மேளம் ஆகியவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அன்றைய தமிழ்ப்புலவர்கள் இவரை ‘நிமிசகவி’ என அழைத்தனர். நிமிட நேரத்தில் சிறந்த தமிழ்க் கவிதை ஒன்றை இலக்கண முறைப்படி இயற்றி முடிக்கும் தன்மை வாய்ந்த காரணத்தால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கப் பெற்றது.

முந்தைய சேது மன்னர்கள் இராமேஸ்வரம் இராமநாதசுவாமியிடம், பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். மாறாக, இவர் குமரக்கடவுள் மீது குறையாத அன்பு கொண்டு முருகனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாதிட்டு வந்தார். இவர் இயற்றிய 7 சிற்றிலக்கியங்களில் மூன்று முருகனைப் பற்றியது ஆகும். 'வள்ளி மணமாலை’, ‘சரசசல்லாப மாலை’, ‘சடாக்கரப் பதிகம்’ என்பன அவை. இவரது பிற படைப்புக்கள் பாலபோதம், நீதிபோதம் என்பனவாகும். ஏறத்தாழ 1000 பாடல்கள் இவர் இயற்றியுள்ளார்.

அதுவரை வாழ்ந்த சேதுமன்னர்கள் புலவர்களது புதிய படைப்புக் களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துச் சிறந்த தமிழ்ப்புரவலராக