எஸ். எம். கமால்
29
மன்னரது தளவாய் இராமப் பையன். நாயக்கர் படைகள் தொடக்கத்தில் சேது நாட்டிற்குள் புகுந்து எளிதாகப் போகலூர், அரியாண்டிபுரம். அத்தியூத்து ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றியவாறு கிழக்கே முன்னேறிச் சென்றன.[1] சேதுநாட்டு மறவர்களது கடுமையான தாக்குதலை மேலும் தாங்கமுடியாத மதுரைப் படைகளின் முன்னேற்றத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அத்துடன் மதுரைப் பேரரசிற்கு வடக்கே பிஜப்பூர் சுல்த்தானது படையெடுப்பு அபாயமும் அப்பொழுது இருந்தது. இதனால் சேதுநாட்டுப் போரினைச் சிறிது காலம் நிறுத்தி வைத்த மதுரைத் தளவாய் வடக்கே போர்ச்சுகீசியரின் தலைமை இடமான கோவாவிற்குச் சென்று போர்ச்சுகல் நாட்டு கவர்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு தகுந்தபடை உதவியுடன் தளவாய் சேதுநாட்டிற்குத் திரும்பினார்.[2]
வலிமைவாய்ந்த மதுரைப் படையினைச் சமாளிப்பதற்கு ஏற்ற இடமாகக் கருதி சேதுபதி மன்னர் இராமேஸ்வரம் தீவிற்குச் சென்றார். என்றாலும் மதுரைத் தளவாய் பாம்பனிற்கும் மண்டபத்திற்கும் இடையே கடலின்மீது ஒரு பாலம் அமைத்து அதன் வழியாக மதுரைப் படைகள் சேதுபதி மன்னரைப் பின்தொடருமாறு செய்தார்.
இராமேஸ்வரம் தீவில் இராமேஸ்வரம் நகருக்கு முன்னதாக உள்ள இன்றைய தங்கச்சிமடம் அருகே இருபடைகளும் பொருதித் தாக்கின. இரண்டாவது நாள் போரில் சேது மன்னரது படைகளுக்குத் தலைமை தாங்கிய போகலூர் கோட்டை வன்னியத்தேவன் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். மிகப்பெரிய வீரனாக விளங்கிய வன்னியத் தேவனது திடீர் மறைவு சேதுபதி மன்னருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது. மதுரைத் தளவாய், சேதுபதியை எளிதில் வெற்றிகொண்டு அவரைச் சிறைபிடித்து மதுரையில் உள்ள திருமலை நாயக்கர்மன்னர் முன் நிறுத்தினார். சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை திருமலை நாயக்கரது இந்த சேதுநாட்டுப் படையெடுப்பைப் பற்றிய நாட்டுப்புற இலக்கியமான இராமப்பையன் அம்மானை விவரமாக வரைந்துள்ளது. மேலும் இந்தப் போரில் வன்னியத் தேவன் ஆற்றிய போர்ப் பணியையும் சிறப்பாக இந்த அம்மானையில் சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேதுபதி பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய தம்பித் தேவரைத் திருமலைநாயக்க மன்னர் மறவர் சீமையின் மன்னராக நியமனம் செய்தார். அந்நியரது கைப்பாவையான தம்பித் தேவரை மன்னராக ஏற்றுக்கொள்ள மறுத்த மறக்குடி மக்கள் மறவர் சீமையெங்கும்