பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

59

அதுவே யாத்திராகாலமாதலால், காலைக்கடன்களையெல்லாம் முடித்துச் சித்தனாயிருந்த சேரன்-செங்குட்டுவன், தன் வழிபடுகடவுளாகிய சந்திர சடாதரரது திருவடிப் பாதுகைகளை, யாவர்க்கும் வணங்காததும் வஞ்சிமாலை சூடியதுமான தன்சென்னியால் வணங்கித் தரித்துக்கொண்டு, அந்தணர்கள் வளர்க்கின்ற அக்கினிஹோத்திரங்களையும் நமஸ்கரித்துத் தன் பட்டவர்த்தனக் களிற்றின் மேல் உரிய நன்முகூர்த்தத்தில் ஆரோகணித்தனன். அப்போது, ‘குடவர் கோமானாகிய செங்குட்டுவன் கொற்றங்கொள்வானாக’ என்று வாழ்த்தினவராய், ஆடகமாடமென்னுங் கோயிலினின்றும் திருமாலின் பிரசாதத்துடன் வந்து சிலர் அரசன் முன் நிற்க, தான் சிவ பிரான்பாதுகைகளைச் சென்னியிற் றாங்கியிருந்தமையால், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத்தேந்தியவனாய் அங்கிருந்தும் பிரயாணிப்பானாயினன். அவன் செல்லும்போது நாடகக்கணிகையர்கள் அரங்குகடோறும் நெருங்கிக் கூடி நின்று இருகையுங் கூப்பிக்கொண்டு ‘யானை மேல் வெண்கொற்றக்குடை நிழலில் விளங்கும் அரசனது காட்சி எங்கட்கு என்றும் இன்பம் பயந்து விளங்குவதாக’ என்று துதித்தனர். சூதரும் மாகதரும் வேதாளிகரும் செங்குட்டுவனது வெற்றிப்புகழ் தோன்றும்படி வாழ்த்திக் கொண்டு உடன் சென்றனர். யானை குதிரை வீரர்களும் வாட்படை தாங்கிய சேனைகளும் தங்கள் வேந்தனது வாள் வலியை ஏத்தி ஆர்ப்பரித்தனர். இங்ஙனமாக, அசுரர்மேற் போர்குறித்து அமராவதியினின்று நீங்கும் இந்திரன் போல, செங்குட்டுவனும் வஞ்சியினின்றும் புறப்பட்டு, தூசிப்படையானது கடற்கரையைத் தொடும்படி பரவிய தன்சேனைகளால் மலைகளின் முதுகு நெளியவும், நாட்டில் வழியுண்டாக-