பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சேரன்-செங்குட்டுவன்

மேல், புணர்ச்சியுற்ற அன்னங்களது புளகிப்பால் வீழ்ந்த இளந்தோகைகளைச் செறித்து இரட்டையாக விரிக்கப்பெற்ற பள்ளியிடையே, கோப்பெருந்தேவியாகிய இளங்கோவேண்மாள் தூக்கமென்பதின்றித் தனித்திருக்க, அத்துயரைச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்தவராகிய செவிலிமார்கள் ‘அன்னாய்! காதற்கொழுநனைக் காணாதிருந்த நின்கவலையை இனி யொழியக்கடவாய்’ என்று கூறிப் பாசுரங்களோடு சேர்த்துப் பல்லாண்டு பாடுவாராயினர். அவ்வாறே, அரசிக்கு ஊழியஞ்செய்யுஞ் சிந்தருங் கூனருஞ் சென்று அடிவணங்கி ‘தேவீ! எம்பெருமான் வந்துவிட்டனன்; இனி நீ முகமலர்ச்சியுடன் கூந்தலில் நாளொப்பனைபெற்று நலம்பெற விளங்குக’ என்றார். இங்ஙனம் ஆயத்தார் அரசியின் பிரிவாற்றாநிலையை ஒருசார் ஆற்றி நிற்க, மலைகளிற் புனங்காவல் செய்யுங் கானவன் ஆங்கு மூங்கிலிற்கட்டப்பட்ட தேனையுண்டு களித்து அக்களிப்பால் கவண்விட்டுக் காவல் புரிதலை நெகிழ்ந்தமையின், அச்சமயமறிந்து செழித்தபுனக் கதிர்களை உண்ணுதற்கு வந்த பெரியயானைகள் நல்லதுயிலடையும்படி மலைமகளிர் புனப்பரண்மேலிருந்து கொண்டு ‘வட திசைச்சென்று வாகையுந்தும்பையுஞ் சூடிய போர்க்களிறுகள் திரும்பும் வழி சுருங்கக்கடவது’ என்று தாந்தாம் அறிந்தவாறு பாடிய குறிஞ்சிப் பாட்டுக்களும், ‘வடவரசரதுகோட்டைகளைத் தகர்த்துக் கழுதைகளை ஏரிலே பூட்டியுழுது கொள்ளை விதைத்த உழவனாகிய குடவர்கோமான் நாளை வந்து விடுவான்; ஆதலாற் பகடுகளே! நுகம்பூண்டுழுது நாட்டைப் பண்படுத்துவீராக; பகைமன்னரைச் சிறை நீக்கும் அவன் பிறந்தநா ளொப்பனையும் வருகின்றது’ என்று பாடும் உழவரது ஒலியமைந்த பாடல்களும், அரசனது ஆனிரைகளைக்