பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பெருமாள்

271

செல்க” என்பது கருத்து. “கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத்தூடல் உண்டு”[1] என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவனைத் தலைவி புலந்து கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக்கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, “பரத்தையர் ஒருவரல்லர், பலர் உளராயினும், தலைவன் தனக்கே உரியன் எனப்படுவன் என்பதைப் பரத்தை உணர்தல் வேண்டும்; எங்ஙனமெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும் தாமரையொன்று உளதாகிய வழி அக்குளம் தாமரைக் குளம் என்றே உரைக்கப்படும்” என்ற கருத்துத் தோன்ற அப்பரத்தைக்குப் பாங்காயினர் கேட்ப, “திறமலி இன்மொழிச் செந்துவர் வாயின, எங்கையர்க்கே மறமலி வேலோன் அருளுக, வார்சடையான் கடவூர்த், துறைமலி ஆம்பல் பல்லாயிரத்துத் தமியே எழினும், நறைமலி தாமரை தன்னது அன்றோ சொல்லும் நற்கயமே”[2] என்று நவிலுகின்ருள்.

இனி, இத்திரு மும்மணிக் கோவைக்கண் வரும் பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை நூல்களிற் காணப்படும் கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு நிற்கின்றன.

“மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினை முதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி யானா
அன்பு பொறைகூர மேன்மேன் முயங்கிக்

கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்”[3]

என்ற இப்பாட்டுக் குறுந்தொகையில் வரும்

“உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்
தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

காரு வெண்பூக் கொழுதும்”[4]

  1. தொல், பொருள். பொருள் : 39.
  2. திரு. மும்ம. 24.
  3. ௸ 19.
  4. குறுங். 85.