பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

சொன்னால் நம்பமாட்டீர்கள்



அவர் எழுதிய “மலைக்கள்ளன்” என்ற நாவலைப் படித்து நான் பிரமிப்படைந்தேன். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழில் அழகாக நாவல் எழுத முடியுமா? என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன். “மலைக்கள்ளனை” ஒரு முறை படித்துப் பாருங்கள் என்று

இந்த மலைக்கள்ளன் நாவல் கவிஞரால் எழுதப்பட்டு பல ஆண்டுகளாக, கேட்பாராற்றுக் கையெழுத்துப் பிரதியாகக் கிடந்திருக்கிறது.

கவிஞரின் ஆற்றலை அறிந்த சின்ன அண்ணாமலை, இந்த அரிய கருவூலத்தைத்தேடி எடுத்து.கண்கவரும் அழகிய நூலாகத் தமிழ்ப்பண்ணை மூலம் வெளியிட்டிருக்கிறார்.

வேலைக்காரியை விடப் பலமடங்கு சிறப்பான கதை மலைக்கள்ளன். அதை யாராவது நல்ல முறையில் திரைப்படமாக்கினால் நிச்சயம். தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு வெற்றிகரமான தமிழ்ப்படம் கிடைக்கும்.

ஆற்றல் மிக்கவர் நாமக்கல் கவிஞர். அவரது ஆற்றலை உலகறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை, ஆகவேதான் இவ்விருவரையும் இந்த விழாவிற்கு அழைக்கச் சொன்னேன்” என்று அண்ணா அவர்கள் அன்று மிக அருமையாகப் பேசினார்கள்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலையே நாராயணன் கம்பெனி திரு நாராயண அய்யங்கார் அவர்கள் என்னைப் பட்சிராஜாஸ்டுடியோவிற்குக் கூட்டிக்கொண்டு போய் ஸ்ரீராமலு நாயுடு அவர்களிடம் “மலைக்கள்ளன்” கதையைச் சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். கதை பிடித்தது. படமாக எடுத்தார்கள்.