பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிவாஜிக்கு என்ன தொழில்?

கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை அவர்கள் தமிழகத்தின் தவப்பயனால் அவதரித்தவர். நாஞ்சில் நாட்டில் (கன்யாகுமரி மாவட்டம்) தோன்றிய அந்த மாபெரும் கவிஞர். குழந்தை உள்ளம் கொண்டவர்.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டினுள்ளே இருந்து வந்தார். நான் குமரி மாவட்டம் செல்லும்போதெல்லாம் ‘பாட்டாவை’ பார்க்கத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடுமுழுவதும் கவிமணியைப் ‘பாட்டா’ என்றே அன்புடன் அழைப்பார்கள்.

கவிமணி வெளி உலகம் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் இலக்கியத்திலே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர். தமிழ் உண்டு; கவிதாதேவி அருள் உண்டு: இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நானும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களும் இன்னும் சில நண்பர்களும் கன்யாகுமரி சென்றபோது கவிமணி அவர்களைப் பார்க்கச் சென்றோம்.

எல்லோரையும் கவிமணி அன்புடன் வரவேற்றார்கள். ‘இவர்தான் சிவாஜிகணேசன்’ என்று அறிமுகப்படுத்தினேன், உடனே கவிமணி மிக்க மகிழ்ச்சி அடைந்து “அப்படியா, தம்பிக்கு