பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

சொன்னால் நம்பமாட்டீர்கள்



பெரியாரும் மகிழ்ச்சியாக என் பேச்சைக் கேட்டு ரசித்தார். நான் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படலானேன். “இந்தாங்க இதைப் பெட்ரோலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்” என்று 10 ரூபாய் கொடுத்தார். நான் மறுத்தும் கேளாமல் என் பையில் போட்டுவிட்டார்.

சிலமாதங்கள் கழித்து, கும்பகோணத்திற்கு நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தோம். எங்களுக்குக் கும்கோணம் ஏ.ஆர்.ஆர். சீவல் கம்பெனி அதிபர் திரு. இராமசாமி அவர்கள் வீட்டில் மதிய உணவுக்கு ஏற்பாடாகி இருந்தது.

நாங்கள் அங்கு சென்றபோது பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் அங்கு வந்திருந்தார்கள். பெரியாருடன் ஒவ்வொருவராகப் போட்டோ எடுத்துக் கொண்டு, அதற்காகப் பத்து ரூபாய் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

நானும் பெரியாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். எல்லோரைப் போலவே ரூபாய் பத்து நானும் பெரியாரிடம் கொடுத்தேன். “நீங்களுமா?” என்றார் பெரியார்.

“ஆமா இந்த பத்து ரூபாய் உங்களுடையதுதான். திரும்பி உங்களிடமே வருகிறது” என்றேன். “ரொம்ப மகிழ்ச்சி” என்று சொல்லிப் பெரியார் சிரித்துக் கொண்டார்.