பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

207



காலையில் ஒடிப்போன பையன் வீட்டுக்கு வரவேயில்லை, சாப்பிடவும் இல்லை. அடிபட்ட தாயாருக்குத் தான் அடிப்பட்டது கூட மறந்து போய்விட்டது. ‘பையன் இன்னும்’ சாப்பிட வரவில்லையே?’ என்ற கவலை வந்து விட்டது.

உடனே பக்கத்து விட்டுக்காரரிடம் போய், தம்பி, நம்ம குப்புசாமி காலையில் சாப்பிடாமல், வெளியே போனவனை இன்னும் காணோம்.

நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கூட்டிக் கொண்டு வருகிறீர்களா? உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு என்று கெஞ்சினாளாம்.

“அது யாரு குப்புசாமி? இன்று காலையில் உன்னைப் போட்டு அடித்தானே அந்தச் சண்டாளப் பயலா? அவன் சாப்பிடவில்லை என்று கவலைப்படுகிறாயாக்கும். போ, போ.” என்று பக்கத்து வீட்டுக்காரர் ரொம்பவும் கோபமாய்ப் பேசினார்.

ஆனாலும் அந்த அம்மாள் விடாமல், “ஐயோ? அவன் ரொம்ப சின்னப் பிள்ளைங்க, தெரிஞ்சது அவ்வளவுதானுங்க. நீங்க கொஞ்சம் தயவு பண்ணி அவனைத் தேடிக் கூட்டியாங்க.” என்று காலில் விழுந்து கெஞ்சினாளாம்.

தாயன்பு என்பது அப்படிப்பட்டது. தமிழ் மக்கள் அந்தத் தாயன்பைத்தான் பெரியாரிடம் காட்டுகிறார்கள்.

“தமிழ் மக்களை அவர் முட்டாள் என்றாலும் முண்டங்களே என்றாலும் தமிழ் காட்டுமிராண்டி மொழி யென்றாலும் திருக்குறள் மட்டமான நூல் என்றாலும் கம்பனைக் கடிந்தாலும் முருகனை, ராமனை, சீதையைக் கேவலமாகப் பேசினாலும் தமிழ் மக்கள் பெரியாரிடம் அன்பு காட்டுகிறார்கள். இதுதான் தாயன்பு என்பதாகும்” என்று கூறி, பெரியாரைக் கொஞ்சமும் தாட்சண்யம் பார்க்காமல் தாக்கிப் பேசினேன்.