பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“தலைவர் அவர்களே, பெரியார் அவர்களே, நான் என்ன பேசினாலும் பொறுமையுடன் கேட்பது என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டு வந்திருக்கும் பெரியார் பக்தர்களே.” என்று ஆரம்பித்ததும் சபையில் களைகட்டியது.

“நான் ஒரு முட்டாள்” என்றதும் மீண்டும் கரகோஷம், “ஆமாம், நான் அறிவாளியாக இருந்தால் இந்தக் கூட்டத்திற்கு வந்து மாட்டிக்கொள்ளுவேனா?” என்றதும் , பெரியார், “முட்டாளைத்தான் நாங்க மதிப்போம். இங்கே எல்லோரும் முட்டாள்கள்தான்,” என்றாரே பார்க்கலாம். கூட்டத்தில் வெடிச் சிரிப்பு ஏற்பட்டது.

“பெரியார்கடவுள் இல்லை என்பவர், நான் கடவுள் உண்டு என்று நினைப்பவன். தமிழ் மக்கள் பலர் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு நேர் மாறான எண்ணம் கொண்டவர் பெரியார். இவருடைய செய்கை பலருக்குப் பிடிக்காது. இவர் சொல்வது அநேகருக்கு வேம்பாக இருக்கிறது.

ஆயினும் தமிழ் மக்கள் இவரிடம் தாயன்பு காட்டுகிறார்கள். எதிரிலிருப்பவர்களை முண்டங்களே என்கிறார். ‘முட்டாள்கள்’ என்கிறார். ஆயினும் மக்கள் அன்பு காட்டுகிறார்களே எப்படி? அதுதான்தாயன்பு.

“என் நண்பர் ஒருவருக்கு ஒரு மகன் இருந்தான், அவன் தாயாரைத் தொந்தரவு செய்து பணம் நகை முதலியவற்றை வாங்கிச் சென்று செலவழிப்பது வழக்கம். ஒரு சமயம் அவனுடைய தாய், பணமும் இல்லை, நகைகளும் இல்லை என்று சொல்லிவிட்டாள். உடனே அந்தச் சத்புத்திரனுக்குக் கோபம் வந்து விட்டது. ருத்ரமூர்த்தியாகித் தாயின் தலைமயிரைப் பிடித்து இழுத்து வீதியில் போட்டு நாலு மொத்து மொத்திவிட்டு ஒடிவிட்டான்.