பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

சொன்னால் நம்பமாட்டீர்கள்



இக்கடிதத்தைப் படித்ததும் புளகாங்கிதமடைந்தேன். பின்னர் மெய்யம்மையைப் பற்றி கருப்பையாவிடம் பல குறுக்கு விசாரணைகள் செய்தேன். அவளைப் பற்றி அவன் சொல்ல சொல்ல, அவளை உடனே பார்க்க வேண்டும்போல் தோன்றியது.

சிறை தடையாக இருந்தது. போலீஸ் காவல்வேறு குறுக்கே நின்றது.

அவள் கடிதத்திற்குப் பதில் எழுத பேப்பர், பேனா எல்லாம் கருப்பையா கொண்டு வந்திருந்தான். அவைகளை வாங்கிக் கொண்டு, அவனை மாலையில் வந்து கடிதத்தை வாங்கிக்கொண்டு போகும்படி சொன்னேன். கருப்பையா போய்விட்டான்.

பலவாறு யோசனை செய்து காதல் கடிதம் எழுதலானேன். கருத்துக்கள் கும்மாளி போட்டுக் கொண்டு வந்தன. பத்து பக்கத்திற்கு மேல் எழுதி விட்டேன். படித்துப் பார்த்தால் எனக்கே அதிசயமாக இருந்தது. இப்படியும் நம்மால் எழுத முடியுமா? என்று ஆச்சரியப்பட்டேன்!

காதல் வாசகங்கள் கொப்பளித்து நின்றன. வருணனைகள் அணிவகுத்து வரிசையாக நின்றன. கடிதம் பூராவும் ஒரே முத்தமாரி பொழிந்திருந்தது. கடிதத்தைப் படித்தால் கண்டிப்பாக உள்ளக் கிளர்ச்சி ஏற்பட்டே தீரும். அவ்வளவு போதை ஊட்டும் வார்த்தைகள் பொங்கிவழிந்தன. ஒருவாறு கடிதத்தை முடித்தேன். கருப்பையா வந்தான். கடிதம் பெற்றுக்கொண்டான். பதில் கடிதம் வந்தது. பரவசமாக இருந்தது. அதற்குப் பதில் எழுத முனைந்து எழுதித் தள்ளினேன்.

வரிசையாக அவள் கடிதம் வந்தது. பதில் கடிதமும் பறந்தது. கருப்பையா மூலம்தான் கடிதப் பரிமாறல்!