124
சோழர் வரலாறு
சிறப்பிடம் பெற்றுள்ளன.[1] “இம்மணமுறையில், (1) எரிவளர்த்தல் இல்லை (2) தீ வலம் வருதல் இல்லை; (3) தக்ஷிணை பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” என்று திரு.பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளது கவனித்தற்குரியது.[2]
சிலப்பதிகாரம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. அந்நூலில் கோவலன், கண்ணகி மணம் முதற்காதையுள் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் யானை மீது சென்று மாநகரத்தார்க்கு அறிவித்தலே புதுமையானது.[குறிப்பு 1] அத்திருமணத்தில் (1) மாமுது பார்ப்பான் மறை வழி காட்டல் (2) தீ வலம் செய்தல், (3) பாலிகையின் தோற்றம் என்பன புதியவை. அம்மறையவன் ‘சமணப் பெரியோன்’ என்பர் ஆராய்ச்சியாளர். ‘கோவலனும் கண்ணகியும் சமணர் ஆதலின், வேத முறைப்படி மணந்திரார்-சமண முறைப்படியே மணந்தனராவர்’ என்பர் அவ்வறிஞர். மணம் முடிந்த பிறகு மன மக்கள் வாழ்த்தப் பெற்றனர். பின்னர் அனைவரும் சோழ வேந்தனை வாழ்த்தி மண நிகழ்ச்சியை முடித்தனர்’ என்பது சிலப்பதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது.
பூம்புகார்: இந்த நகர வருணனை சிலப்பதிகாரம் ஐந்தாம் காதையுள் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. நகரம் காவிரியாற்றின் வடகரையில் அமைக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. இரண்டிற்கும் இடையில் திறந்த வெளி உண்டு. அங்கு மரத்தடிகளில் கடைகள் இருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையை அடுத்து உயர்ந்த
- ↑ இப்பழக்கம் இன்றும் பூவாளுர் - செட்டிமாரிடம் இருக்கிறது. அவர்கள் தம்மைக் ‘காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டிமார்’ என்று கூறுகின்றனர்.