டாக்டர். மா. இராசமாணிக்கனார்
277
இளவரசன் ஒருவனை மணந்தவள். பிள்ளையார் அம்மங்கை ஆழ்வார் என்பவளைப் பற்றிய குறிப்புத் தெரியவில்லை; பெயர் மட்டுமே தெரிகிறது[1].
இராசகேசரி முதற் குலோத்துங்கன் கி.பி. 1022 வரை சோழப் பேரரசை (52 ஆண்டுகள்) அரசாண்டான் என்பது அறிந்து இன்புறத்தக்கது[2]. இவனுக்குப்பின் விக்கிரமசோழன் சோழப் பேரரசன் ஆனான். இக்குலோத்துங்கன் கல்வெட்டுகள், திருமன்னி வளர’, ‘திருமன்னி விளங்க’, ’பூமேல் அரிவையும்', ‘பூமருவிய திருமடந்தையும், புகழ் மாதுவிளங்க', ‘புகழ் சூழ்ந்த புணரி’, ‘பூமேவி வளர முதலிய தொடக்கங்களை உடையன.
(கி.பி. 1122 - 1135)
முன்னுரை: விக்கிரம சோழன் கி.பி. 1118-இல் முடி சூடிக்கொண்டு கி.பி.1122 வரை தன் தந்தையுடன் இருந்து அரசு செலுத்தினான்.இவன் ஆணித்திங்கள் உத்திராடத்திற் பிறந்தவன். இவன் தன் தந்தையின் இறுதிக் காலத்தில் இருந்த சோழப் பெருநாட்டிற்கு உரியவன் ஆயினான். இவனது ஆட்சியின் பெரும் பகுதி போரின்றி அமைதியே நிலவியிருந்தது என்னலாம். இழந்த கங்கபாடியிலும் வேங்கியிலும் இவனுடைய கல்வெட்டுகள் இருப்பதை நோக்க, அவ்விரண்டு நாடுகளிற் பெரும்பகுதி இவன் காலத்திற் சோழப் பெருநாட்டில் மீண்டும் சேர்க்கப் பட்டது என்பது தெரிகிறது.
கல்வெட்டுகள் : இருவகைத் தொடக்கம் கொண்ட மெய்க்கீர்த்திகள் இவனுக்குண்டு. ஒன்று “பூமாது” அல்லது “பூமகள் புணர” என்னும் தொடக்கத்தை உடையது; மற்றது ‘பூமாது மிடைந்து’ என்று தொடங்குவது.