பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

#8 * லா. ச. ராமாமிருதம் திடீரென அவளுள் தாங்கமுடியாத ஆங்காரம் மூண்டது. வீட்டுக்கு விரைந்தாள். அம்மாள் சமையலறையில் வேலையா யிருந்தாளோ என்னவோ ஐயரைக் காணவில்லை. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, ஏதாவது ஒன்றைச் சுற்றுமுற்றும் தேடினாள். கூடத்தில், குழந்தை கைவிரித்தபடி குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனிடம் பல்லைக் கடித்துக்கொண்டு, கண்களில்-பொறி பறக்க, இருகைகளையும் நீட்டிக்கொண்டு சபித்தாள். "உன்னை வைசூரி வாரிண்டு போக!” கூட விளையாடும் குட்டிகள், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதைக் கண்டதில்லையா? குழந்தைக்குத் துாக்கத்தில் உடம்பு தூக்கிவாரிப் போட்டது. கையைக் காலை உதைத்துக் கொண்டு அலற ஆரம்பித்துவிட்டான். அடிவயிற்றிலிருந்து வந்த அந்த உள்ளக் கொதிப்பு வீண் போகுமா? பையனுக்கு மூன்று நாள் ஜூரம் மழுவாய்க் காய்ந்தது. பிறகு ஒன்று, இரண்டு, பத்து என்று உடம்பெல்லாம் பெரிய முத்துக்கள் வாரியிறைத்து விட்டன. ஊசி குத்த இடமில்லை. குழந்தை தன் நினைவற்று, போட்டது போட்ட படியே கிடக்கிறான். ஸன்னமாய் இழையும் அனல் மூச்சுத்தான் இன்னமும் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை உணர்த்துகிறது. தாய் மூலையில் புரண்டு புரண்டு அழுகிறாள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, அவளைத் தேற்ற முயலும் உற்றார் உறவினர்களுக்கிடையில் அவளே தனிக்காட்சி ஆகிவிட்டாள். ஐயர் ரேழியில் முன்னும் பின்னுமாய் உலாவிக் கொண்டிருக்கிறார். முன்பைவிட உடல் மெலிந்து, கூன் விழுந்திருக்கிறது. 'அம்பாள் கொடுத்தாள்; அம்பாள் எடுத்துக் கொள்கிறாள்' என்று ஞானம் சமாதானம் சொன்னாலும், பாசம் பசி தீர்த்து விடுமா?