பூவை. எஸ். ஆறுமுகம் Δ 23
மனிதத் தன்மை மிக்க நாடகம்தானா ?
ஊஹூகும் !
இந்த நாடகத்திலே :
மனிதத்தன்மை காவு கொடுக்கப்பட்டிருக்கிறது !
குற்றவாளிகள் : கங்கா+பிரபு !...
சமுதாயக் குற்றவாளிகள், சமுதாயத்தின் குற்றவாளிகள் இவர்கள் !
கங்கா தனது கற்பைப் பறிகொடுத்திருக்கிறாள் !
பிரபு இந்தக் கங்காவின் கற்பைப் பறித்துக் கொண்டிருக்கிறான் !
சமுதாயத்தில் ‘அங்கம் வகிக்கும் மனிதர்கள் தங்களுடைய ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும்போதுதான், சமுதாயத்தின் மனிதர்கள் மேன்மை பெறவும், அதன் விளைவாகவும் விளைபலனாகவும் சமுதாயம் மேம்பாடு அடையவும் வாய்ப்பு, வசதி ஏற்படும்.
சமுதாய நியதி இது.
சமுதாய விதியும் இதுதான்.
இந்த நியதியும் இந்த விதியும் மாறினால், அல்லது, மாற்றப்பட்டால்,சமுதாயத்தின் மனச்சாட்சித் தோற்றம் பாழ்படுவதுடன் அல்லது பாழ்படுத்தப்படுவதுடன், சமுதாயம் சார்ந்த மனிதர்களின் குணநலப்பொலிவுகளும் பாழ்படுகின்றன ; அல்லது பாழ்படுத்தப்படுகின்றன !
ஆகவேதான், இங்கே, இப்போது கங்காவும் பிரபுவும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் !