பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தகடூர் யாத்திரை


சென்றனர் ஒளவையார். அவரது தமிழ்ச் சிறப்பினை நுகர்ந்த அதிகமானுக்கு அவரை விரையச் செல்லவிடுதற்கு மனமில்லை. அதனால், அவருக்குப் பரிசில் தருகின்ற காலத்தை நீட்டிக்கொண்டே போயினான்.

அதிகமானின் உள்ளச்சால்பினை அப்போது அறியாதவரான ஒளவையார், அவனது செயலின் நோக்கத்தைத் தவறாகவே கொண்டனர். பரிசில் தராது தம்மைக் கழிக்கவே அதிகமான் காலத்தை நீட்டிப்பதாகக் கருதி விட்டனர்.

ஒருநாள், தம் மூட்டையைக் கட்டிக் கொண்டு அரண்மனையினின்றும் வெளியேறிக் கொண்டிருந்த ஒளவையாரை, வாயிற்காவலனாக நின்றிருந்த அதிகமான் தடுத்து நிறுத்தினான். அவரது முடிபை உணர்ந்து அதனைத் தடுத்துவிட நினைந்தே அதிகமான் வாயிற் காவலனாகப் புனைந்து கொண்டு நின்றிருந்தான்.

வாயிற் காவலன் தம்மைத் தடுத்ததும், ஒளவையரின் சினம் பொங்குகின்றது. அரசன் பரிசில் தருவதை நீட்டிக்க, இவன் வெளிச்செல்ல விடாதும் தடுக்கின்றன்னே என வேதனைப் பட்டார். அவனோ, தாயே! அதிகமான் பரிசில் தராது நீட்டித்தது உண்மைதான்; எனினும் தராமல் விடுப்பான் அல்லன்; எனவே, தாங்கள் இருக்கைக்கு ஏகுங்கள் யான் செய்தி தெரிவிப்பேன்’ என்கின்றான்.

“வாயிற் காவலனே!"

“வண்மை உடையவரது செவியிடத்தே, விளங்கிய சொற்களை விதைத்து, அதன் மூலம் தாம் நினைந்த பரிசிலை விளைத்துக் கொள்வதற்கு வலிமையுடைத்தான நெஞ்சினை உடையேம் யாம். மேம்பாட்டிற்கு வருந்தும் இப் பரிசிலால் வாழ்கின்ற வாழ்க்கையை உடைய எம்போல்வார்க்கு அடைத்திராத வாயிலைக் காத்து நிற்பவனே'

“விரைந்த குதிரையை உடைய தலைவனாகிய அதிகமான் அஞ்சி தான், தன் தரத்தினை அறியமாட்டானோ? அல்லது, என் தரம் யாதெனத் தான் அறிந்தானில்லையோ?”

"அறிவும் புகழும் உடையவர்கள் இறந்தாராக, அத்தகையோர் அற்றுப்போதலால் வறுமையுற்றுக் கிடக்கின்ற உலகமும் இதுவல்லவே! அதனாற்றான், எம் கலங்களைக் காவினேம்; எம் முட்டுக்களையும்" கட்டினேம்.

“மரத்தைக் கொல்லும் தச்சன் பெற்றவரும், கையில் மழுவினைக் கொண்டவருமான கைத்தொழில் வல்ல மக்கள்