பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

சோலை சுந்தரபெருமாள்


கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம் மாலையே தெருவில் திடீரென்று ‘புசு புசு’ வென்று ஒரு வதந்தி பரவியது. சண்முகத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு, நிர்வாணமாக்கி, அடியோ தண்டதென்று அடிக்கிறார்கள் என்ற வதந்தியே அது. வதந்தி உண்மையா என்ற சர்ச்சை கிளம்பியது. யார் யாரோ பார்த்தேன் என்றார்கள். ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள சில தைரியசாலிகள் ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள். நானும் ஓரளவு தைரியம் பெற்றவனாய் கிளம்பினேன். வதந்தி உண்மைதான் உடம்பு பூராவும், ரத்தக் காயங்களுடன், தோல் கிழிந்து சதை தெரிய உடம்பில் வஸ்திரம் எதுவுமின்றி குப்பையாய்க் கிடந்தான் சண்முகம்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே தரையில் கிடந்த அவனை சில பேர் தூக்கி இடுப்பில் துண்டைக்கட்டி ரிக்ஷாவில் போட்டு வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

மறுநாள் நான் ஆபீசுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய போது சண்முகத்தின் வீட்டு வாசலில் கூட்டம். வேகத்துடன் போய் எட்டிப் பார்த்தேன்.

உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் சண்முகம். இரண்டு மூன்று பேர் ஆஜானுபாகுவான அவனை உத்தரத்திலிருந்து இறக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வெளியே கேட்பாரற்று விழுந்து கிடந்தது சைக்கிள்.