பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

65


மாலையில் அங்கே தள்ளாடித் தள்ளாடியபடி வந்தான் ரத்தினசாமி. அவன் தூரத்தில் வரும்போதே, பெரிய திண்ணையில் குருமூர்த்தி உட்கார்ந்திருப்பதை அவன் கண்டான். எப்போதும் அவனைக் கண்டதுமே புன்சிரிப்போடு வரவேற்கும் வழக்கமுள்ள அந்த முகத்திலே அன்று ஈயாடவில்லை, ரத்தினமே கிட்ட வரவர அவருடைய முகம் குரூரமாயிற்று. கடைசியிலே சரேல் என்று எழுந்து மகா ஆத்திரத்துடன் அந்த ஒட்டுத் திண்ணைப் படுக்கைமீது அவன் கண் பார்க்கப் பலமாக ஓர் உதைவிட்டார். அது இரண்டு, கஜதூரம் எழும்பி நடுரோட்டிலே போய் விழுந்தது.

ரத்தினம் பிரமித்துப் போய், வாசல் பூவரச மரத்தடியிலே சப்த நாடியும் ஒடுங்கிக் குன்றியவனாய்ச் சிலைபோல் நின்றான். குரூமூர்த்தியும் சிறிது நேரம் எங்கேயோ வெட்டவெளியைப் பார்த்தவராய் நின்றார். பிறகு அந்த இடத்தை விட்டு அப்பால் போய்விட்டார்.

ரத்தினத்துக்குச் சிறிது சுயநினைவு வந்தது. “மனிதன் மிருகம்! மனிதன் மிருகம்! மனிதன் மிருகம்...!” என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்; நடு வீதியில் அவந்தரையாய்க் கிடந்த படுக்கையைச் சுற்றிக் கையில் எடுத்துக்கொண்டான். மனிதனுக்கும் பசியும், தாகமும் இருக்கின்றன; இயற்கையின் தூண்டுதல்களுக்கு அவனுந்தான் ஆட்படுகிறான்; தீ, காற்று, நீராவி, மின்சாரம் இவையெல்லாம் விசை கொண்டு கண்மூடித் தொழிற்படுவது போல, உணர்ச்சி வேகத்திலே, உடம்பின் விறுவிறுப்பிலே, உள்ளத்தின் பரபரப்பிலே தன்னை அறியாமல் என்ன என்னவோ செய்து விடுகிறான்! நியாயம், தர்மம், சத்தியம், பாவம், புண்ணியம் எல்லாம் விவகாரப் பேச்சுக்கு, உள்ளம் பொங்கிவிடும்போது, இவையெல்லாம் அர்த்தமற்றுப் போகின்றன.

உண்மை என்ன? கல்யாணச் சந்தடியிலே அது நடந்துவிட்டது. ரத்தினத்தின் ஆயுள் பரியந்தம் நிரந்தர வேதனையை நல்கிட்ட அதுதான். நாலு பேர் அங்கேயே கிசுகிசு என்று அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், குருமூர்த்தியின் காதில் அதைப் போட யாரும் துணியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வந்ததுமே அவருக்கு எப்படியோ அது எட்டிவிட்டது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், ஒரு மனிதனுக்கு எப்படித்தான் இருக்கும்! குருமூர்த்தி அந்த நிமிஷத்திலே என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனால், அவர் மானி; வேதாந்தி; சாந்தமூர்த்தி. சாந்தம் என்ற குன்றைக் குடைந்து வரும் ஆத்திரம் கங்கையின் வீழ்ச்சியாக இருக்குமா? அது அருவி நீர்போல் வலியற்றுப் போய்விட்டது.