பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சோலை சுந்தரபெருமாள்


அன்று முதல் குருமூர்த்தி வேறு மனிதராகிவிட்டார். நஞ்சு தோய்ந்த பாம்புபோல் ரத்தினமும் அவர் கண்ணிலுமே படத் துணிவின்றி ஒளிந்து ஒளிந்து நடமாடினான்.

சிவகாமி அதற்குப் பிறகு வெகுகாலம் உயிரோடிருக்கவில்லை. அவளுடைய கடைசி நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை, சில நடைமுறைகளாலும் அரையுங் குறையுமாய்க் கேள்விப்பட்ட சில தகவல்களாலும் ஊகித்து அவன் கற்பனை செய்ய முடிந்தது.

அவளைக் குருமூர்த்தி ஒரு வார்த்தையும் கடிந்து சொல்லவில்லை. ஓடு, வெளியே என்று துரத்தவில்லை. தாமரையிலை நீர்போல், வீட்டிலே இருந்தும் இராதவராக ராஜரிஷிபோல், மனத்துறவு பூண்டு அவர் வாழத் தொடங்கினார்.

சிவகாமி? அவள் சாகு முன்பே, விஷயம் குருமூர்த்தியின் காதுகளை எட்டியவுடனேயே, உண்மையில் செத்துவிட்டாள்; நடமாடும் சவமானாள். அதோடு அன்று ஆரம்பித்த காய்ச்சல், படிப்படியாக உயிர் குடிக்கும் பெருநோயாக மாறி, சில மாத காலத்தில் அவள் ஆயுளைத் தீர்த்துவிட்டது.

இதெல்லாம் ஒன்றும் விந்தை இல்லை. மயானத்திலே அவளுக்குக் கொள்ளி வைத்தபின் குருமூர்த்தி தம்மை மீறி வாய்விட்டுச் சொன்னாராமே சில வார்த்தைகள், அவை தான் ரத்தினத்தின் நெஞ்சை இன்னமும் வாள்போல் அறுக்கின்றன.

“நீ இனிப் புனிதையாகிவிட்டாய். உன் மூடத்தனத்துக்குப் பிராயச்சித்தம் ஏற்பட்டுவிட்டது. போ, சுமங்கலியாய்ப் போய் வா; ஆனால், அவன்.... அவன்... அந்த அறியாத வாலிபன்!...” இதோடு அவர் நின்றுவிட்டாராம். என்ன சொல்ல எண்ணியிருப்பார்? என்னதான் எண்ணியிருப்பார்? இனி அதை அறியும் வகை ஏது? ஆறு மாதத்துக்கு முன் வரையில் முனிவரைப்போல் வாழ்ந்து வந்து அவருந்தான் போய்விட்டாராமே!

இந்தப் பெட்டி வண்டி? இதை அந்தச் சாந்தப்பனைத் தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று அவர் சொன்னாராம், அவனும் வெகுநாள் வரைக்கும் இதிலேயே எந்நேரமும் துக்கம் நிறைந்த முகத்தோடு வந்து படுத்திருந்து சில வருஷங்களுக்கு முன் உயிரை விட்டானாமே! என்ன விந்தை!

அவள் மாண்ட பிறகு, யாரும் அறியாமல் ஊரை விட்டு ஓடிய ரத்தினம், எங்கெங்கோ திரிந்தான். எவ்வளவோ பொருள் சம்பாதித்தான். - உள்ளத்தின் சுமை மாத்திரம் சுமக்க முடியாப் பெரும் பாரமாக இருந்தது. பல பெண்கள் அவனை நாடி வந்தும், மணம்புரிய அவன் மனம் இசையவில்லை. கொங்கணச் சேரியை வந்து பார்க்க, எத்தனையோ தடவை என்னவோ ஓர் ஆசை வந்து உந்தியது. ஆனால் ஒரு பயமும் கூடவே வந்து அதை அத்தனை தடவையும் தடுத்தது. கடைசியாக இந்தத் தடவை வந்தேவிட்டான்.