பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல் - சமூக முன்னேற்றத்துக்கும், சமூக விடுதலைக்கும் பாடுபடச் சுயமரியாதை இயக்கம் கண்ட ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்களைப் பாராட்டுவதோடு, அவர் தலைமையில் பரிபூரண நம்பிக்கை தெரிவிப்பது - என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது!

சுயமரியாதை இயக்கத்துக்குச் சூடுபிடித்து விட்டது. சொரணையிழந்து, சோம்பிக்கிடந்த தமிழ் மக்களின் துருப்பிடித்த மூளைக்குச் சாணை தீட்டப்பட்டது. வெட்டாத கத்திகளை வீசமுடியாத கரங்களால் வீசிச் சுயமரியாதை இயக்கத்தையும், ஈ.வெ.ரா. பெரியாரையும் நாவில் நரம்பின்றித் தூற்றினர் பாதிக்கப்பட்டோர்; காங்கிரஸ் போர்வையில் மதவாதிகளின் பின்னிருந்து பார்ப்பனர் தூபம் போட்டனர். “தேசபந்து”, “நவசக்தி”, “சுதேச மித்திரன்” ஏடுகள் அதிகமாகத் தாக்கத்தொடங்கின. நாத்திகர், தேசத்துரோகி, மதத்துவேஷி, வகுப்புவாதி என்ற பட்டங்கள் ராமசாமிப் பெரியாருக்கு அந்த வட்டங்களால் வழங்கப்பட்டன. 1928-ல் “ரிவோல்ட்” என்னும் ஆங்கில வார ஏட்டினையும் பெரியார் துவக்கி நடத்திவந்தார். “திராவிடன்” நாளேட்டுக்குப் பெரியாரும், ஜனக சங்கர கண்ணப்பரும் ஆசிரியர்களாக இருந்தனர்.

தமிழ்நாடு இளைஞர்களையெல்லாம் சுயமரியாதை இயக்கம் தன்பால் ஈர்த்தது. நீதிக்கட்சியின் முன்வரிசையிலிருந்த தலைவர்களான சர் ஆர்.கே. சண்முகம், சர் ஏ. ராமசாமி, சர் ஏ.டி. பன்னீர் செல்வம், எஸ். முத்தையா, எஸ். ராமச்சந்திரன், சி.டி. நாயகம், பி. சிதம்பரம் ஆகியோர் சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார பீரங்கிகளாக எஸ். இராமநாதன், எஸ். குருசாமி, சாமி சிதம்பரனார், கே.வி. அழகர்சாமி, அ. பொன்னம்பலனார், ஏ.எஸ். அருணாசலம், சொ. முருகப்பா, ராம. சுப்பையா, சி.ஏ. அய்யாமுத்து, நாகைமணி, எஸ்.வி. லிங்கம், ச.ம.சி. பரமசிவம், சி. நடராசன், சின்னையா, சித்தர்காடு இராமையா, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், என்.பி. காளியப்பன், பி.எஸ். தண்டபாணி, ஏ.ஆர். சிவானந்தம், கருப்பையா, வே.வ. இராமசாமி, ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் புரிந்தனர். கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவ்வப்போது ஆணி அறைந்தாற்போல் இவர்கள் பதிலுரைப்பர். பெரியாரின் கூட்டத்தில் கலகம் விளைவித்துக் கலைத்துவிடச் சிலர் முயன்றதெல்லாம் இவர்களின் ஈடுபாட்டால் கனவாகவே போயிற்று. கல்லெறிதல், செருப்புவீசுதல், தண்ணீர்ப் பாம்பு விடுதல் இவையெல்லாம் கண்டு கலங்காத பெரியார், எதிர்ப்பையே எருவாகக் கொண்டு, இயக்கத்தினை வளர்த்து வந்தார், இவர்கள் துணையுடன்!