பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

102


இந்தி எதிர்ப்புப் போரில் சர்வாதிகாரியாகிச் சிறை ஏகினார். இறுதிவரை பெரியாரின் நண்பராக இருந்தார்.

சிவகங்கை வழக்கறிஞர் எஸ். இராமச்சந்திரன் (சேர்வை) அகமுடையார் வகுப்பில் பெருந்தலைவர். சுயமரியாதை இயக்கத்தில் அளவுகடந்த பற்றுள்ளவர். 1929-ல் திருநெல்வேலி சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை ஏற்று அரிய கருத்துகளை வழங்கியவர். 48-ம் வயதில் 26-2-1933-ல் அகால மரணமடைந்தபோது பெரியார் எல்லையற்ற துயரமடைந்தார். இவரது மகன்தான் பிற்காலத்தில் சர்வீஸ் கமிஷன் தலைவராயிருந்த ராமசுப்ரமணியம். இவருடைய உறவினர்கள் அத்தனை பேரும் வழக்கறிஞர்கள்; சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இவற்றில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர்கள். சிவகங்கை ஆர். சண்முகநாதன், கே. ராஜசேகரன் ஆகியோர் கழகத்தின் முக்கியப் பொறுப்பேற்றனர்; குடும்பமே இயக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

பூவாளூர் அ. பொன்னம்பலனார் அளவு விரைவாக மேடையில் பேசவல்லார் இன்று ஒரே ஒருவர்தான் இருக்கின்றார். அவர் பெயர் கி. வீரமணி எம்.ஏ, பி.எல். போட்மெயில் பொன்னம்பலனார் என்றே மக்கள் அன்புடன் இவரை அழைத்தனர். பெரியாருடனும், தனித்தும், தமிழகத்திலும், மலேயாவிலும் இவர் சென்று பேசாத ஊரே கிடையாது. தி.மு. கழகத்தில் சேர்ந்து இறுதி நாள்வரை இயக்கப் பணியாற்றினார்.

கோவை சி.ஏ. அய்யாமுத்து இறுதிவரை சுயமரியாதைக் காங்கிரஸ்காரராயிருந்து 1975-ல் மறைந்தார். ஆங்கிலப் பெண்மணியான மிஸ்மேயோ தனது(Mother India) இந்தியத்தாய் என்ற நூலில் இந்திய மக்கள் கல்வி அறிவில்லாமல் இருப்பதற்குக் காரணம் பார்ப்பனர்களே - என்று குறிப் பிட்டிருந்தார். குப்பைக்காரி என்றெல்லாம் தேசியத்தலைவர்கள் மேயோவை ஏசினபோது அவர்களுக்குப் பதிலளிக்கும் முறையில் எழுதப்பட்ட மேயோகூற்று மெய்யா பொய்யா என்ற இவரது நூல் பிரச்சினைக்குரியதாய் விளங்கிற்று. நல்ல தமிழ் அறிவு கொண்ட பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர்.

வயி.சு. சண்முகம், முருகப்பா. ராமசுப்பய்யா ஆகியோர் செட்டி நாட்டுப் பகுதியில் இயக்க வளர்ச்சிக்கு உரமேற்றிய அன்பர்கள். ராமசுப்பையா தி.மு. கழகத்தில் இன்றும் முதிய தொண்டர்.