பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



வயி.சு. சண்முகம் மறைந்த பின்னும் முன்னர் அவரால் கலப்புத் திருமணம் செய்துகொள்ளப்பட்ட மஞ்சுளாபாய் அம்மையார் தமது முதுமையிலும் இயக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார். பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார் இப்போது (1979-ல்).

எஸ். வி. லிங்கம், தண்டபாணி ஆகியோர் நல்ல விதண்டாவாதிகள்; யாரும் இவர்களிடம் அகப்பட்டுச் சொற்போராடி மீள முடியாது.

சவுந்தரபாண்டியனாரும், இராமசாமியாரும் மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் நாடார் சமூகத்திடையே இயக்கம் வேரூன்றிச் செல்வாக்குப் பெற இறுதிவரை உழைத்தவர்கள். 1945-க்குப்பின் சவுந்தரபாண்டியனார் ஒதுங்கி வாழ்ந்தார். 1979-ல் மறைந்த வே.வ. இராமசாமி முதிய வயதிலும் சுயமரியாதை வீரராய் விளங்கினார்.

“குடி அரசு” எழுத்தாளர்களில் சந்திர சேகரப் பாவலர் நல்ல தமிழ், வடமொழிப் பாண்டித்யம் உள்ளவர். புராண இதிகாச நூல்களை அலசி ஆராய்ந்தவர். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு எருவிடுவதுபோல இவரது தெளிவான கட்டுரைகள் செறிவுடன் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளங்கின.

பகுத்தறிவு எழுத்தாளர்களில் பழைய பெரியோர் வரிசையில் முதலிடம் சாமி கைவல்யம் அவர்களுக்கே. கள்ளிக் கோட்டையில் பிறந்து, திருச்சியில் பயின்று, இந்தியா முழுவதும் சுற்றியலைந்தவர். கோவை மாவட்டத்தில் இவருக்கு அதிகச் செல்வாக்கு. இவரை அறியாத மக்களே கிடையாது. பொன்னுசாமி என்ற இயற்பெயர் மறைந்தது; கைவல்ய நூலைப்பற்றி அதிகமாக விவாதம் செய்து வந்ததால், கைவல்ய சாமியார் என்ற பெயரே நிலைத்தது. தர்க்கம் செய்வதில் இவருக்கு இணையானவர் யாரும் இலர். கற்றறிந்தவர்களாகக் கருதப்பட்ட ஆத்திகப் பெரியோர் பலர் இவரிடம் வாதிட அஞ்சி ஓடி ஒளிவர். பெரியாருடைய 24-ஆம் வயது முதல் இவர் நண்பர்; சிறிது மூத்தவர். கருத்த உயர்ந்த மேனி; வெளுத்த முடி; மழித்த முகம்; வெள்ளை வேட்டி; வெண்மையான தொளதொள அங்கி; கையில் மெலிந்து நீண்ட ஒரு தடி; வேறு ஒன்றும் சொத்து கிடையாது. எங்கு சென்றாலும் மரியாதையான அன்பான உபசரணை.

கண்டவுடன் “வாங்க சார்” என வாஞ்சையுடன் அழைத்து, முதலில் வெற்றிலை பாக்கு வாங்கி வந்து,