பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

104


கைவல்யசாமியைப் பெரியார் உபசரிப்பார். அங்கேயே உட்கார்ந்து ஆராய்ச்சிப் பொருள் நிறைந்த அறிவு கமழும் கட்டுரை எழுதித் தந்து சென்று விடுவார் கைவல்ய சாமியார்.

சுயமரியாதைச் சேனா வீரர்கள் இன்னும் எண்ணற்றோர் எழுதிட இயலுமா?

பெரியாரின் புயல்வேகப் பணிகளால் வைதிகம் ஆடி அலறித் துடித்தது. பரம்பரையாய் அரசியலிலும் ஆன்மிகத்திலும் தலைமைப் பீடத்தில் அமர்ந்துகொண்டு, நகத்தில் அழுக்குப்படாமல், வெயிலில் அலையாமல், மேனி குலையாமல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நல்ல வண்ணம் அனுபவித்து வந்த ஆதிக்கபுரியினர், மதத் தலைவர்களைச் சரணடைந்து, பெரியாரை மடக்கிவிட மனப்பால் குடித்தனர். சிருங்கேரி மடத்துச் சங்கராச்சாரியார் முயன்று பார்த்தார். நாயக்கர்வாளும், அவரது பார்யாளும் பொதுநலத்தொண்டு செய்து வருவதைத் தாம் பாராட்டுவதாகவும் அவர்களிருவரும் தம்மைச் சந்திக்கத் தாம் விழைவதாகவும் 'திருமுகம்' அனுப்பியிருந்தார். அவரைச் சந்திப்பதால் இயக்கத்திற்கு எள்ளளவு பயனும் ஏற்படப் போவதில்லையெனும் தமது தோழர்களின் கருத்தை மதித்துப் பெரியார், சங்கராச்சாரியாரின் அழைப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை எனப் பணிவுடன் தெரிவித்தார்.

வெறும் வாய்ச்சொல் வீரர்களாகச் சுயமரியாதை இயக்கத்தவர் விளங்கிட மாட்டார்கள் என மெய்ப்பிக்குமாறு, நிறையச் சுயமரியாதைக் கலப்பு மணங்களை நடத்தி வைத்தார் பெரியார். குறிப்பிடத்தக்க இணைகளாகச் சிதம்பரனார் - சிவகாமி, குருசாமி - குஞ்சிதம், சிதம்பரம் - ரங்கம்மாள், முருகப்பா-மரகதவல்லி, சண்முகம் - மஞ்சுளாபாய், இராம சுப்ரமணியம் - நீலாவதி, இரத்தினசபாபதி - அன்னபூரணி, ராமசுப்பய்யா- விசாலாட்சி ஆகியோர் விளங்கினார்கள். இவையன்றி நாடு முழுதும் ஏராளமான விதவைத் திருமணங்கள், புரோகிதம், சடங்கு ஒழிந்த திருமணங்கள் ஆகியவற்றையும் பெரியார் நடத்தி வந்தார். பெண்ணுரிமை பேணுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்த பெரியார். 1928-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கர்ப்ப ஆராய்ச்சி என்ற, குறைவாகக் குழந்தை பெறும் குடும்பநலத் திட்டத்தைக் கொள்கையாக அறிவித்துப் பிரச்சாரமும் செய்து வந்தார்.

தமிழ் நாட்டில் மிக நல்லவகையில் சுயமரியாதைக் கருத்துக்கள் வேர்விட்டு முளைத்தன. இந்த முறையில் சொல்லும் செயலும் ஒருமித்து விளங்கியதால் மிகக்குறுகிய கால அளவான நான்கைந்து ஆண்டுகளில், 1925-முதல் 1929 வரையில், தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்திற்குக் கடைக்கால் நன்கு போடப்பட்டு விட்டது!