119
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
இடுக்கண் இன்னல் அடுக்கடுக்காய் வந்தாலும், துன்ப துயரங்கள் தொய்வின்றித் தொடர்ந்தாலும், அன்பு தவழும் முகமும், அருள்சுரக்கும் அகமும் கொண்ட எம் அன்னை நாகம்மையார் ஈரோட்டில் உள்ளவரை எமக்கேது குறை - எனச் சுயமரியாதை இயக்கத்தின் தோழர்களும் தோழியர்களும் தென்புடன் கட்டிவைத்த நம்பிக்கை மாளிகை; நாசமாய்ப் போயிற்றே! 1933 ஏப்ரலில் நோயாய்ப்படுத்தவர் எழுந்து நடமாடாமலே மே 11-ஆம் நாள் அனைவரையும் அவலக்கடலில் தள்ளி அபலைகளாக்கிப் போனாரே! அந்தோ !
நாற்பத்தெட்டாண்டுகள் நலிவின்றி வாழ்ந்தவர், தமக்கென்று வாழாமல், கணவர்க்கென்றே வாழ்ந்தவர்; அவருக்குத் தாம் வாழ்க்கைத் துணைவியே தவிர, அவர் தமக்கு வாழ்க்கைத் துணைவர் என்ற கருத்தினால் அவர்க்குத் தொல்லை தராமல், சாதாரணப் படிப்பறிவு பெற்றிருந்தும் இந்தியத் துணைக்கண்டமே விந்தையுடன் விழிதிருப்பி நோக்குமளவுக்கு அரசியலில் - போராட்டத்தில் - வரிசையாய் ஈடுபட்டுச், சிறைசென்று, நாடுசுற்றித் தொண்டாற்றி, விரும்தோம்பிப், பத்திரிகை நடத்தி, இயக்கத்தை முடுக்கிப்; பெரியார்க்குக் காதலியாய், மனைவியாய்த், தோழியாய்த் தொண்டராய், அன்னையாய் அமைச்சராய்த் தலைவியாய்ப் பிள்ளையாய் - ஏன் அனைத்துமாய் - நின்ற அம்மையார் மறைவு நிம்மதிக் குறைவுதானா பெரியாருக்கு?
அம்மையார் மறைவால் பெரியாருக்கு ஓர் அடிமை போனதா? ஆதரவு போனதா? இன்பம் போனதா? உணர்ச்சி போனதா? ஊக்கம் போனதா? எல்லாம் போயிற்றா? என்ன சொல்வதென்றே யார்க்கும் விளங்கவில்லை! ஏறத்தாழப் பதினொரு திங்கள், பெரியார் தம்மைப்