பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

138



1932 - அக்டோபரில் தஞ்சையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், அவரை அகற்றுவதற்குப் பெரியாருடைய ஆதரவை நாடினார் பொப்பிலி அரசர். சுயமரியாதை இயக்கத் தோழர்களின் பேருதவியினால் பொப்பிலி அரசர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1932 முதல் 1936 வரையில் முதன் மந்திரிப் பதவியும் வகித்தார்; மற்ற இரு மந்திரிகளாக முந்தைய இருவருமே நீடித்தனர்.

1935-ல் நீதிக்கட்சி, பெரியார் தந்த ஈரோடு வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது. தாம் ஒரு ஜமீன்தாராயிருந்தும், நாட்டுமக்கள் நலனில் நீதிக்கட்சிக்கு உண்மையான அக்கறை உண்டு என நிரூபித்து நிலைநாட்டிக் காண்பிக்கவே, பொப்பிலி அரசர் பெருமுயற்சி எடுத்துப் பெரியாரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் வைதிகர்கள், பிரபுக்கள், பிரிட்டிஷ்காரர் ஆகிய முத்தரப்பினரின் எதிர்ப்பும் நீதிக்கட்சிக்குப் பரிசாகக் கிடைத்தது.

“பகுத்தறிவு” மாத இதழ் ஒன்றினைப் புத்தக வடிவில் பெரியார் துவங்கியிருந்தார். பண்டித முத்துசாமி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஜலகண்டபுரம் ப. கண்ணன் ஆகியோர் இதில் பயனுள்ள எழுத்துப் பணி புரிந்து வந்தனர். விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிப் பூர்வமான கட்டுரைகள், புராண இதிகாச மோசடிகளைப், புரட்டுகளை விளக்கும் கட்டுரைகள், சமூக சீர்திருத்தக் கதைகள், கவிதைகள் இதில் இடம் பெற்றன. இது சுமார் நான்காண்டுகள் நடைபெற்று வந்தது. 1934-ஆம் ஆண்டு பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம் சென்னையில் அரங்கேறிய போது பெரியார் தலைமை தாங்கிக் கவிஞருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டினார். 1946-ஆம் ஆண்டில் அண்ணா முயற்சியால் சென்னையில் கவிஞருக்குப் பணமுடிப்பு வழங்கப்பட்டது.

புதுவை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரின் கொள்கைகளை நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றைக் கவிதை வடிவில் வெளியிட்டு வந்தார். இறுதிவரை அவர் இந்த நிலையிலிருந்து பிறழவில்லை . தேசியமும் ஆத்திகமும் கலந்தே பாடிய பாரதியின் சீடராயினும், இவர் நாத்திகரே. மிகப் பெரிய பரம்பரை ஒன்றை இவர் உருவாக்கி விட்டார். இவரால் கவிதையுலகில் செய்யப்பட்ட முதல் மாறுதல்கள் பெரிய திருப்புமுனையாய் நிற்கின்றன. அஞ்சா நெஞ்சமும் ஆழ்ந்தகன்ற பெரும் புலமையும் புதுமையான நோக்கும் கொண்ட இவர் உலக அளவில் தமக்கு நிகரற்ற நிலை பெற்றுவிட்ட கவிஞராவார். மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும், மடையர்களும் இயற்றிடுவார் சுடவுட்பாடல் என்ற வரிகள் இவரது புரட்சி மனப்பாங்கைக் காட்டும். வயதில் அறிவில் முதியார் நாட்டின் வாய்மைப் போருக்கென்றும்