பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

170


வரலாற்றிலேயே ஒப்புவமை கிடையாது.1969 - ல் இந்திய ஜனாதிபதியாகும் வாய்ப்பினை ஒதுக்கித் தள்ளித், தாய்த் தமிழக மேன்மைக்குச் சகலத்தையும் தரத்துணியும், தியாகத் தீப்பிழம்பு!

1938-ல் அன்னை நாகம்மையார் மறைவுக்குப் பின்னர் நெருக்கமாயிருந்து, தனிப்பட்ட முறையில் பணிவிடைகள் செய்து, பராமரிக்க யாருமில்லாமலிருந்த பெரியாருக்கு, ஒரு செவிலிப் பெண் தொண்டராக வேலூர் கனகசபை அவர்கள் மகளார் கே. அரசியல்மணி 1943-ல் பெரியாரிடம் வந்து சேர்ந்தார். 1973-ல் பெரியார் மறையும் வரை அவரை விட்டு அகலவேயில்லை ! பக்குவமாய்ப் பத்தியமாய் உணவு சமைத்தல், வேளைதவறாமல் ஒழுங்குடன் உண்ணச் செய்தல், வற்புறுத்திக் குளிப்பாட்டுதல், வலியுறுத்தித் துணி மாற்றுதல், வருவோரை உபசரித்தல், வீட்டில் கணக்கு எழுதுதல் குடி அரசுப் பதிப்பக நூல்களின் சிப்பங்களைச் சுமந்து பெரியாருடன் பயணம் சென்று விற்பனை செய்தல், இயக்கத்தின் கொள்கைகளில் முழு நம்பிக்கையோடும் தலைவர் மீது பரிபூரண விசுவாசத்தோடும் தொண்டாற்றுதல், எளிமையாயிருத்தல், இனிமையாய்ப் பழகுதல், இவ்வளவு நற்பண்புகட்கும் உறைவிடமான அரசியல்மணி 1949 ஜூலை 9-ஆம் நாள் ஈ.வெ.ரா மணியம்மை ஆனதில் என்ன தவறு? 64 வயதில் இறந்து போயிருக்க வேண்டிய பெரியாரை 95 வயதுவரை வாழவைத்த பெருமை மணியம்மையாரையே சாரும். இது ஒன்று போதாதா, தமிழ்க்குலம் அம்மையாருக்கு நன்றி பாராட்ட? தலைவரையிழந்தும் கழகத்தைக் கைவிடாமல் இவர் காப்பாற்றி, உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு மேலும் 5 ஆண்டு வாழ்ந்திருந்தது பெரும் நல்வாய்ப்புத்தானே?

வடகண்டம் ராஜகோபால் நாராயணசாமி பி.ஏ. ஆனர்ஸ், 1943-ல் இளந்தாடி நெடுஞ்செழியன் எம். ஏ. நெடிதுயர்ந்த கவர்ச்சி மிகு உருவம், குற்றால அருவியெனக் கொட்டும் தமிழ்ச் சொல்வளம், மணிக்கணக்கில் கேட்பாரைப் பிணிக்கும் நயம். பெரியாரின் தளபதிகளில் சிறந்தவர். 1948-ல் திருமணத்துக்குப் பின் பேச்சு நடையில் பெருமாற்றம் எனினும் நாளொன்றுக்கு மூன்று வெவ்வேறு ஊர்களில் பேசிடும் ஆற்றல். “மன்றம்” இதழ் வேண்டும் போது வரும், நிற்கும், நடக்கும், ஆழ்ந்த தமிழறிவு, அகலமான உலகறிவு, சுயதலமற்ற பொது நலப்பணியே வாழ்வின் குறிக்கோள். 1948 முதல் அண்ணா எவ்வழி அவ்வழி நாவலர், அதனால்தான் அவர் மறைந்த 1969-ல் சிறு விலகல், பின், சேர்க்கை , அண்ணா , கலைஞர் அமைச்சரவைகளில் இரண்டாம் இடம் இவருக்கே.