பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
 12. விரைந்தார்


சேலம் மாநாடு - திராவிடர் கழகம் பிறந்தது - வடநாடு பயணம் - கருப்புச் சட்டை - ஆகஸ்டு 15 துக்க நாள். ஜூலை 1 திராவிட நாடு பிரிவினை நான் - மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் - தூத்துக்குடி, ஈரோடு மாநாடுகள் - 1944 முதல் 1948 முடிய.

முத்தமிழ்க் கலைஞர்கள் சுயமரியாதைக் கொள்கைகளையும் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்ய உதவியாகப், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சி மேற்கொண்டு, சென்னையில் முத்தமிழ் நிலையம் ஒன்றை அமைத்தார். 1944 சனவரி 2-ஆம் நாள் பெரியார் இதனைத் தொடங்கி வைத்தார். பாரதிதாசன் கவிதைகள் “குடி அரசு” வாயிலாக நன்கு விளம்பரம் செய்யப்பட்டு, இதற்குள் மூன்று பதிப்புகள் செலவாகிவிட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 7-ஆம் நாள் கா. சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் பெரியார், தமிழிசையும் கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பின் கீழ், அரியதோர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் நாட்டில் தமிழன் தன் பொருளைச் செலவழித்துத், தான் நுகரும் இசை, தமிழ் மொழியில் இருக்கவேண்டுமென்று கேட்பது தவறா? இந்த உணர்ச்சி இப்போது வெற்றி பெற்று வருவது பாராட்டற்குரியதுதான் எனினும், நரஸிம்ஹ மூர்த்தியே என்று பாடி வணங்குவதற்குப் பதில் சிங்கமுகக் கடவுளே என்று பாடி வணங்குவதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? பஜனை, பக்திப் பாடல்களை எந்த மொழியில் பாடினால் தான் என்ன? அதே போல் புராண நாடகங்களால் என்ன பலன்? நந்தனார் பார்த்தால் தீண்டாமை பெருகும்; கிருஷ்ணலீலா பார்த்தால் விபச்சாரம் பெருகும் - என விளக்கினார். இவைகளை முறியடிக்க எம்.ஆர் ராதா நடத்தி வரும் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் ஆதரித்து வந்தார். நாகப்பட்டினத்தில் மார்ச் 10-ஆம் நாள் எம்.ஆர். ராதாவைப் பாராட்டினார்.

நடிகவேள் என்று திருச்சியில் பட்டுக்கோட்டை அழகர்சாமியால் பட்டமளிக்கப்பட்ட எம்.ஆர். ராதா 1943-முதல்