பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

188


சிந்தித்து, 1945-செப்டம்பர் 29-ஆம் நாள் “குடி அரசு” இதழில், கருப்புச்சட்டைப் படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் இதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் இத்தகைய அறிவிப்பு, 22-12-1945 “குடி அரசு” இதழ் வரையில் தொடர்ந்து வெளியாயிற்று. கருப்புச்சட்டைப் படையின் முதல் தொண்டராக, மு. கருணாநிதி தம்மைப் பதிவுசெய்து கொண்டார் ஈரோட்டில்.

திருச்சி மாநாடு, தனிச் சுதந்திரத் திராவிட நாடு வேண்டும் என்றும், தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் புரட்சிகரமான இரு முடிவுகளையும் மேற்கொண்டது. அடுத்த திங்கள் 11-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார், தேர்தல் பகிஷ்காரம் ஏன் என விளக்கினார். நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம்; பெண்டிரும் புடவை இரவிக்கை அணியலாம்; கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளையே போடலாம் என்ற கருத்துகளைப் பெரியார் கூறினார். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை. நீலச்சட்டை, ஹிந்துஸ்தாள் சேவாதள் ஆகியவை இருப்பது போல, இங்கும் கருப்புச் சட்டைப் படை இருக்கும் - என்றார் பெரியார்.

உடல்நலங் குன்றியதால் பெரியார் நவம்பர் 20-ஆம் நாள் முதல் டிசம்பர் 31 முடிய குற்றாலத்தில் தங்கியிருந்தார். இதற்கு ஒரு காரணம், கடந்த நவம்பர் முதல் நாள் என்.எஸ். கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் இருவருக்கும் 14 ஆண்டு கடின காவல் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பாகும். பெரியார் இதனால் மனங்குமைந்து போனார். நாடெங்கும் திராவிடர் கழகக் கூட்டங்களில் இவர்களிருவரையும் விடுதலை செய்ய வேண்டிக்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கிருஷ்ணன் நாடக சபா ஒன்று துவக்கியிருந்தார். இதில் டி.வி. நாராயணசாமி, சிவாஜிகணேசன், ஆர்.எம். வீரப்பன், எஸ். எஸ். ராசேந்திரன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்த நாடக சபா தினந்தோறும் கிருஷ்ணன் - பாகவதர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையைக் காட்சியாகக் காட்டி வந்தது. பத்திரிகா தர்மத்தின் பாதுகாவலனான மவுண்ட்ரோடு மகா விஷ்ணு, “இந்து” பக்கிரிகை, என்.எஸ்.கே. சம்பந்தமான செய்திகளையே வெளியிடுவதில்லை . இதனால் மனம் வருந்திய பெரியார், நமக்கு நிதி வசதியும், ஒரு தினசரிப் பத்திரிகையும் தேவை என 1946 சனவரி 5-ஆம் நாள் “குடி அரசு” இதழில் குறிப்பிட்டிருந்தார். கழகப் பிரச்சாரம் செய்யும் தோழர்கள், கூட்டங்களுக்கு ஒத்துக்கொண்டு, போகாமல் தவறி விடும் ஒழுங்கினத்தையும் பெரியார் கண்டித்திருந்தார். யுத்தப் பிரச்சாரத்-