பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


திற்காகத் தரப்பட்ட “விடுதலை” நாளேடு திருப்பித்தரப்பட்டால், நடத்தலாமென விருப்பம் தெரிவித்தார். அதன்படி 1946 ஜூன் 5-ஆம் நாள் முதல் “விடுதலை” நாளேடு மீண்டும் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி தொடங்கிய 60-ஆம் ஆண்டு விழா 1946 சனவரியில் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தியார் சுற்றுப் பயணம் புறப்பட்டார். பெரியார், காங்கிரஸ் அய்ந்தாம்படை ஸ்தாபனந்தான் என்றாலும் காந்தியார் பகிஷ்காரம் இப்போது வேண்டாம்; காங்கிரசே தேர்தலில் வெற்றி பெறும் என்பதாக எழுதினார். இந்த முற்போக்கான காலத்திலும் சேலத்தில் மார்ச் 9, 10 தேதிகளில் சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் பிராமணர் மகாநாடு நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டு பதைத்தார் பெரியார்! திராவிட மாணவர் கழகத்தின் இரண்டாவது மாகாண மாநாடு நீடாமங்கலத்தில் பிப்ரவரி 23, 24 நாட்களில் மிக எழுச்சியுடன் நடை பெற்றது. பெரியார், அண்ணா , ஏ. ராமசாமிக் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர் உள்ளத்தில் மூண்டிருந்த புரட்சிக்கனல் அணைந்திடாமல் பாதுகாத்தார் பெரியார்!

நாடெங்கும் கருப்புச் சட்டை அணிந்தோர் உலா வந்தனர். மதுரையில் கருப்புச் சட்டைப் படையின் முதலாவது மாநாடு குழுமியது. மே திங்களில் 11, 12 நாட்களில் தொடங்கிய கருப்புச் சட்டை மாநாட்டிற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் அண்ணா , கொடி உயர்த்தியோர் என். அர்ச்சுனன், “திராவிட நாடு” படத் திறப்பாளர் ஈரோடு எஸ்.ஆர். காந்தி அம்மையார் (மாப்பிள்ளை நாயக்கர் மகளார். சம்பத், பெரியார் விரும்பியவாறு இவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், பெரியாரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்க மாட்டார்!) அண்ணாவின் அவன்பித்தனா, ராதாவின் போர்வாள் - நாடகங்கள் ஏற்பாடாகியிருந்தன. மதுரை வையையாற்று மணற்பரப்பில் வேயப்பட்டிருந்த மாநாட்டுப் பெரும் பந்தலில் கயவர் நெருப்பிட்டுக் கொளுத்தினர். தங்கியிருந்தோர் திசைமாறி ஓடும்போது, காலிகள் தாக்கினர். இதைத் தொடர்ந்து தமிழ் நாடெங்கும் அமளி கட்டவிழ்த்து விடப்பட்டுக் கழகக் கொடிகளை வீழ்த்துவதும், கலகம் விளைப்பதும் தொடர்ந்தது. ஆனால் அடுத்த வாரமே கும்பகோணத்தில் திராவிடர் மாநாடும், சுய மரியாதை மாநாடும் நடைபெற்றன. இரவில் அண்ணாவின் சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகங்கள். உடல் நலிவோடு அண்ணாவும் இவற்றில் நடித்தார். சிவாஜிகணேசன் சிவாஜியாக வேடம் புனைந்தார். (15-12-1945 அன்று இந்த நாடகம் சென்னையில் அரங்கேறியது. அதுவரை ஸ்தீரி பார்ட்டாக இருந்த நடிகர் வி.சி. கணேசனுக்கு சிவாஜி வேடந்தந்து, தாம் காகபட்டராக நடித்தார் அண்ணா ) ஏ.வி. பி. ஆசைத்தம்பி சுயமரியாதை மாநாட்டுத் தலைமை தாங்கினார்.