பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

190



விருதுநகரில் காமராசருக்கு உறவினராயிருந்தும் துவக்க முதல் இறுதிவரை மயங்காத்திண்மை படைத்த சுயமரியாதை வீரராக விளங்கிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி தமது பள்ளிப் படிப்பு முடிந்த 1943-ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் ஈடுபட்டார். 1944-ஆம் ஆண்டு திராவிட மாணவர் மாநாட்டை அங்கே கே. ஆர். சத்தியேந்திரன் (மாவட்ட நீதிபதி அளவுக்குப் பின்னாளில் உயர்ந்தவர். 1976-ல் இந்திரா காந்தியால் பழிவாங்கப்பட்டோரில் முக்கியமானவர்) போன்ற தோழர்களுடன் நடத்தினார். நகரமன்ற உறுப்பினராயிருந்தார். அண்ணாவுடன் தி.மு.சு. அமைப்புக்கு வந்தார். “காந்தியார் சாந்தியடைய” என்ற நூலை எழுதியதற்காக 6 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுச் சிறையிலிருந்தபோது, அரசு 1950-ல் இவர் தலையை மொட்டையடித்தது. 1957-ஆம் ஆண்டிலும் 1967 ஆம் ஆண்டிலும் சென்னையில் சட்டமன்ற உறுப்பினரானார். கலைஞர் ஆட்சியில் சுற்றுலா வாரியத் தலைவராயிருந்தார். 1977-ல் வடசென்னை நாடாளுமன்றத் தேர்தலில் வென்றார். 1979 ஏப்ரல் 7-ஆம் நாள் அந்தமானில் திடீரென மறைந்தார். “தனி அரசு” இதழாகவும் காளேடாகவும் நடத்தி - அச்சம் தயை தாட்சண்யமின்றி எழுதினார். தொலைவிலிருந்து கேட்பார்க்குத் தந்தை பெரியார் பேசுவது போலவேயிருக்கும் குரலும் பாணியும் இவர் கொண்டு, சிறந்து விளங்கினார். டாக்சி ஆட்டோரிஷாத் தொழிற்சங்கத் தலைவராக நீண்ட நாள் இருந்தார். இன் சொல்லால் உரையாடும் பண்பாளர்.

குடந்தை கே.கே. நீலமேகம் தஞ்சை மாவட்டத்தில் சுயமரியாதை, திராவிடர் இயக்கப் பெருந்தூண். பெரியாரை விடுத்து அண்ணாவுடன் இவர் தி.மு. கழகத்திற்குச் சென்றது பெரியாருக்கு உட்பட எல்லார்க்குமே வியப்பு. ஓங்கிய குரலால் நீண்ட நேரம் மேடைகளில் பேசுவார். நிறைய சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார்.

சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் ஏ. இராமசாமிக் கவுண்டரும், அவரது துணைவியார் கனகம்மையாரும் திராவிடர் இயக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். எந்தக் கூட்டமோ, மாநாடோ, தயங்காமல் பங்கேற்றுப் பணியாற்றுவார்கள். அம்மையார் அரசியல் நிகழ்ச்சிகளில் மிகத் துணிவுடன் கலந்து கொள்வார்கள்.

திருவெற்றியூர் சண்முகம் பெரியாரின் அன்பர், இடைவிடாது நீதிக்கட்சிக்காக உழைத்த பெருந்தகையாளர். அண்ணாவிடமும் பெருமதிப்புப் பெற்றார்.