பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


‘இந்த இடத்தில் நான் இருக்க நினைத்தால் இந்த இடம் எனக்கும் கிடைக்காது. உங்களுக்கும் கிடைத்திருக்காது’ என்றேன்.

‘என்ன இருந்தாலும் நீங்கள் காங்கிரசை விட்டுப்போனது தவறு’ என்றார்.

‘நான் காங்கிரசில் இருந்திருந்தால், இன்று நீங்கள் செய்கிற அளவு காரியம் கூட நான் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது’ என்றேன், கல்வி மந்திரி அவிநாசிலிங்கம் செட்டியார், இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று அரசாங்கப் பத்திரிகையில் எழுதியதைக் காட்டினேன்.

‘என்ன இந்தச் செட்டியாரின் தொல்லை பெரிய வம்பாக இருக்கிறதே’ என்று சொன்ன பிறகு சில வார்த்தைகள் பேசிய பின், ‘என்ன இப்படிக் கிளர்ச்சி ஆரம்பித்து எனக்கு நீங்கள் வேறு தொல்லை கொடுக்கப் போகிறீர்களே! அய்தராபாத் பிரச்சினைப் போராட்டம் துவக்கப்பட்டால் என்ன செய்வது?’ என்றார்.

‘என் நாட்டின் சுதந்திரத்தை முன்னிட்டுச் செய்கிறேன்; அய்தராபாத் போராட்டம் துவக்கப்பட்டால் என் கிளர்ச்சியை நிறுத்திக் கொள்வேன்’ என்றேன்.

அதன்மீது அது பற்றிச் சிறு விவாதம் நடந்தது. முடிவாக ‘நான் எப்படியோ மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்போது இருக்கிறேன். என்னைப் பற்றித் தவறாய்க் கருதக் கூடாது’ என்றேன், ‘கலவரம் ஏதுமின்றி நடத்துங்கள் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிப், பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு என்னை வழியனுப்பினார்.

கிளர்ச்சி தொடங்கியதும் அவரும் அவரது கடமையைச் செய்தார். எப்படியோ முடிந்தது!”

நாள்தோறும் மறியல் நடைபெறுவதும், கர்ப்பிணிப் பெண்டிர் உட்பட மறியல் தொண்டர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல், லாரிகளில் ஏற்றி, நகருக்கு வெளியில் காட்டுப்புறத்தில் இறக்கி வருவதுமாக அரசின் அடக்குமுறை விநோதமாயிருந்தது. போராட்டம் தொடரவே; சிறைத் தண்டனை அடி உதை வலுத்தது. ஊருக்கு ஒருவிதமாகப் போலீஸ் அடக்குமுறை வேட்டை தர்பார் நடந்தது. ஆகஸ்டு 23-ல் சென்னை வரும் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்ட முடிவு மேற்கொண்டதை ஒட்டி, 22-ஆம் நாளே தலைவர் பெரியாரும், தளபதி அண்ணாவும் கைது செய்யப்பட்டு, 27-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். 28-8-48 அன்று பாரதிதாசனின் இரணியன் நாடகம் தடைசெய்யப்பட்டது. தடையை மீறிப் பல ஊர்களில் இரணியன் வேடத்தோடு தொண்டர்கள் கைதாயினர்!