பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

198


தமிழகத்துப் பார்ப்பன ஏடுகள் சிண்டு முடிந்து விட்டதில், தமிழ்நாட்டிலும் கட்டாயமாக்கினர். உண்மையில் கட்டாயப் பாடந்தான்; ஆனால் சொல்லிக் கொண்டதோ விருப்பப்பாடம் என்று. இதிலடங்கிய சூது, சூட்சுமத்தைப் பெரியார் உணர்ந்து கொண்டதால், 10-8-48 முதல் இரண்டாம் இந்திப் போரைப் பெரியார் துவக்கினார்.

இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி துவக்கப்படுமுன்னர் நிகழ்ந்தவற்றைப் பெரியாரே வர்ணிக்கிறார்:- “கிளர்ச்சி துவக்கமானது மாபெரும் அஸ்திவாரத்தின்மீதே துவக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14-ஆம் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடானது சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் மறைமலையடிகள் தலைமையில், தெருக்கள் எல்லாம் அடைபடும்படி, 25,000 மக்கள் முன்னிலையில், அந்த ஹாலும் அந்தத் தெருவும் அதுவரை கண்டிராதபடி மகா உற்சாகத்துடன் கூடியது.

அதில் மறைமலையடிகள், தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கள் முதல், தோழர்கள் கதர் பிரதிநிதி நாரண துரைக்கண்ணனார், காங்கிரஸ் பிரதிநிதி ம.பொ.சி., கிறிஸ்தவப் பிரதிநிதி ரெவரெண்ட் அருள் தங்கையா, முஸ்லிம் லீக் பிரதிநிதி அப்துல் மஜீத், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, வி.வி. ராமசாமி, மாஜி மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை , கே.ஏ.பி. விஸ்வநாதன் முதலிய திராவிடர் கழகத்தினரல்லாதவர்களும், அதன் எதிரிகளும் ஏராளமாக வந்திருந்தனர். இம்மாநாடு தவிர மற்றும் பல மாநாடுகள் - புலவர் மாநாடு, மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடு முதலிய பல மாநாடுகள் கூடி, இந்தியை எதிர்த்துத் தீர்மானங்கள் செய்ததோடு நேரடிக் கிளர்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் முன்வந்தார்கள்.

அந்த மாநாட்டுத் தலைவரை ஆதரித்து நான் காலையில் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால் அதற்கு ஓட்டுக் கொடுப்பேன் என்று கூறினேன். சிலர் அதைப் பற்றித் தவறாகவும் எண்ணியிருப்பார்கள். குறிப்பாக ம.பொ. சிவஞானம் அவர்கள், பெரியார் மந்திரியானால் அவ்விதம் செய்ய மாட்டார். ஏதோ பேச்சுக்கு அவ்வாறு கூறினார்” என்று தனது அதிருப்தியைக் காட்டினார். இன்றும் கூறுகிறேன், நாம் ஆங்கிலத்தை வெறுக்கும் புத்தியை வளர்ப்போமானால் என்றுமே விடுதலை அடைய முடியாத அடிமைகளாகவேதான் இருப்போம்.

நான் இரண்டாம் இந்தி எதிர்ப்புக்குத் தேதி குறிப்பிட்டவுடன் 2 நாட்களுக்கு முந்தி தோழர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், முதல் மந்திரி அவர்கள், என்னை நேரில் அழைத்தார். நான் சென்றதும் என்னை அன்பாய் வரவேற்று, துவக்க வாக்கியமாகக் கலக்கத்துடன், “நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார்.