பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

206


12-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி நகராட்சி மன்றமும், மே 24-ஆம் நாள் திருவரங்கம் நகர்மன்றமும் பெரியாருக்கு வரவேற்பளித்துப் பெருமை ஈட்டின.

பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி 30 ஆண்டு தமிழ் மக்கள் மேன்மைக்குப் பொதுத் தொண்டாற்றி, மேடைதோறும் கதறிப், பணஞ்சேர்க்கத் தெரியாமலும், கிடைத்ததை ஒழுங்குடன் செலவு செய்யத் தெரியாமலும், உடல் மெலிந்து நலிந்து, 1949 மார்ச் 28-ஆம் நாள் தஞ்சையில் உயிர் நீத்தார். பெரியார் பெருந்துன்பமுற்றார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனைக் கொண்டு தஞ்சையில் மே 29-ஆம் நாள் அழகிரி குடும்ப உதவிக்காக 6000 ரூபாய் நிதி வழங்கச் செய்தார். ஒவ்வோராண்டும் மார்ச் 28-ஆம் நாளை அழகிரி நினைவு நாளாகக் கொண்டாடுமாறும் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

1948-ல் ராஜாஜி கவர்னர் ஜெனராலாகச் சென்னை வந்தபோது, கருப்புக்கொடி பிடிக்கத் திட்டமிட்ட பெரியார்; 1949 மே 14-ஆம் நாள் ராஜாஜி திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் பாதாளலிங்கக் குகை திறப்பு விழாவுக்கு வந்தபோது, அங்கே சென்று. ராஜாஜி தங்கியிருந்த ரயில் சலூனில், காலை 6.46 முதல் 7.17 வரை சந்தித்துப் பேசினார். பின்னால் விளைந்த சில நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பெரியார், அவரிடம் ஆலோசனை பெற்றதாக ஓர் எண்ணம் கழகத் தோழர்களிடம் நிலவிற்று. அது உண்மையன்று.

ஓமந்தூர் ரெட்டியாரைப் பெரியார் பாராட்டுகிறார் என்று ராஜாஜியிடம் கோள் மூட்டிய காங்கிரஸ்காரரிடம், “அதுதான் நல்லது! அவர் ஒருவரையாவது நாயக்கர் பாராட்டுகிறாரே! அவருக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்”- என்று அறிவுரை கூறினார். ஆயினும் அது எடுபடாமல், போட்டி ஏற்பட்டு, ஓமந்தூரார் விலகிட, குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல் மந்திரியாகப் பொறுப்பேற்றார். மூன்றாண்டுகளுக்கு இவரே நீடித்தார். எப்படியும் ஒரு பார்ப்பனர் வரமுடியவில்லை என்பதால் பெரியார் மகிழ்வு பூண்டார்.

“நம் நாட்டிலுள்ள பார்ப்பனர்களாகிய ஆரியர்கள் ஜெர்மானிய நாட்டு யூதர்களைப் போலத்தான் இருக்கிறார்கள். அவர்களை விரட்டியடிக்க என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ அதே காரணங்கள் இங்குள்ள ஆரியர்களுக்கும் நாம் கூறமுடியும். இந்த நாட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களைப்போல், நம்மையே கேவலமாக எண்ணிக்கொண்டு, இவர்கள் இங்கே வாழ்கிறார்கள். எனவே இவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று பெரியார் விளக்கந்தந்தார்.