பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

210


திருமணத்தால் ஏற்படும் இழிவையும் பழியையும் நாம் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல, இந்தத் தகாத முறையினால் தலைவி ஆகப்போகும் மணியம்மையின் கீழிருந்து நாம் எதிர்காலத்தில் பணியாற்றவும் தயாராக வேண்டும். “என் ஆயுள் வரையும், கூடுமானவரை என் ஆயுளுக்குப் பின்னும், ஒழுங்காக இயக்கத்தை நடத்தும் தகுதி இந்த மணியம்மைக்கு உண்டு” என்று கூறிவிட்டாரே!

ஓர் இயக்கத்துக்கு வாரிசு முறை எதற்கு? ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா? நடைமுறையிலே வெற்றி தரக் கூடியதுதானா? “இயக்கத்திலே உள்ள எவரிடமும் எனக்கு நம்பிக்கையில்லை. என் நம்பிக்கைக்கு உரியவர்களாக யாரும் தென்படவில்லை. இயக்கத்தை நடத்திச் செல்லும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நான் எண்ணவில்லை” என்கிறார். ஏதோ கோபத்தால் பேசுகிறார் என்றெண்ணிச் சும்மா இருந்து வந்தோம். இயக்கத்திலுள்ள யாராவது துரோகி, கேடு நினைப்பவன் என்று நிரூபிக்க முடியுமானால், விரட்டி விடலாமே!

நம்மை நம்பாதவரை இனி நாம் எப்படி நம்புவது? “உன்னிடம் நம்பிக்கை அற்றவரிடம் இராதே! அவர் தலைமையில் பணியாற்றாதே! ஓடு ஓடு! என்று விரட்டுகிறதே அவர் அறிக்கை! பொருந்தாத் திருமணம் என்று கேள்வியுற்றும் வெட்கப்பட்டோம். இதற்குப் பெரியாரின் அறிக்கை, நமக்கு வேதனையும் ஊட்டுகிறது. இதோ, விரட்டப்படுகிறோம்! தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறுகிறோம்?”

அண்ணா என்ன எழுதினால் என்ன? எப்படிக் கண்ணீர் சிந்தினால் என்ன? தத்தம் குடும்பத்தோடு பெரியாருக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட பெருமக்கள் தமிழகத்தில் நிறையப் பேர் இருந்தனர். நிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும் வசதி படைத்தவர்களாகவும் பலர் சுய மரியாதை இயக்கத்தில் பெரியாருக்காக மட்டுமே எதையும் செய்யச் சித்தமாயிருந்தனர். அப்படிப்பட்டோர் மீண்டும் பெரியார்பால் தங்கள் விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டு, முன்பைவிட ஆழமாகப் பற்றுதல் காட்டத் தொடங்கினர்,

நீடாமங்கலம் அ. ஆறுமுகம், பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, திருச்சி டி.டி. வீரப்பா, குடந்தை டி.மாரிமுத்து, பட்டுக் கோட்டை ரத்தினசாமி சகோதரர்கள், சொரக்குடி வாசுதேவன், திருச்சி பிரான்சிஸ், சேலம் குகை கே.ஜெகதீசன், ரொ.சு. அருணாசலம், குனியமுத்தூர் (கோவை) சதாசிவம், மதுரை பழனிவேலு, நெல்லை தியாகராஜன், கன்னியாகுமரி வழக்கறிஞர் கிருஷ்ணன், சிவகங்கை வழக்கறிஞர் இரா. சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர். சாமி, சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, பண்ணுருட்டி நடேசன், திருப்பத்தூர்