பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

224



சமுதாயத் துறையில் வேலை செய்ய வேண்டுமானால் ஆட்சிக்குப் போய்ப் பயனில்லை. அதனால்தான் நாங்கள் ஒதுங்கி நிற்கிறோம். காந்தியார் கூடத் துவக்கத்தில் அப்படித்தான் கூறி வந்தார், பின்னர் அவரே மாறியதால்தான், அரசியல் நமக்கு வேண்டாமென, நான் காங்கிரசை விட்டு விலகினேன் - என்றெல்லாம் பாண்டமங்கலத்தில் பெரியார் தமது கருத்தைத் தெரிவித்தார். ராஜாஜி இப்போது தமது மத்திய மந்திரி பதவியை விட்டு விட்டு வந்திருந்தார். இது எதற்கோ என்று பெரியார் கூர்ந்து கவனித்து வந்தார். 30.10.51 அன்று கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ். ஏ. டாங்கே திருச்சிக்கு வந்து பெரியாரைச் சந்தித்தார். திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஓட் செய்வதேன்? என்று பெரியார் 5.11.51 “விடுதலை”யில் எழுதினார். “காங்கிரஸ் எதிர்ப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். எதிர்க் கட்சிகளுக்குள் கட்டுப்பாடு தேவை. சட்டசபைக்குச் செல்கிறவர்கள் திராவிட நாடு பிரிவினையில் நம்பிக்கை வைத்து, அதற்காகப் பாடுபடுவேன் என்று கையெழுத்துப் போட வேண்டும் என்பதில் அர்த்தமேயில்லை. அவர்கள் வாக்குத் தவற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தவறினால் எப்படி, என்ன, நடவடிக்கை எடுக்க முடியும்? “திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரத்தில் தன்னிடம் ஆதரவு கேட்டவர்களுக்கு விதித்த நிபந்தனையைப் பெரியார் இவ்வாறாக விமர்சனம் செய்தார். அவர் கணிப்புச் சரியானதென்றே, பின்னாட்களில் மாணிக்கவேலரும், ராமசாமிப் படையாட்சியாரும் நிரூபித்தனர்.

காங்கிரஸ் தோல்விதான் முக்கியம் என்றார் பெரியார். 16.12.51-ல் காங்கிரஸ் தோல்வி நாள் கொண்டாடப் பெரியார் வேண்டுகோள் விடுத்தார். திருச்சியில், ரஷ்யா சென்று திரும்பிய என். எஸ். கிருஷ்ணனுக்கு அளித்த வரவேற்பில், 31.10.51 ல் பெரியார் கலந்து கொண்டு பாராட்டினார். திராவிடர் கழக மத்திய நிர்வாக சபைக் கூட்டம் திருச்சியில் 1951 நவம்பர் 25-ம் நாள் கூடியது. 25, 26, 27, தேதிகளில் கழகத் தோழர்களுக்குத் தேர்தல் பிரச்சார வகுப்பு நடத்தினார் பெரியார். திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் தத்தம் ஆதரவு தருவதற்கு வெவ்வேறு விதமான முடிவுகளை மேற்கொண்டது போல் தோன்றினாலும், உண்மையில் இரு கழகங்களின் முயற்சியும் காங்கிரசைத் தோற்கடிப்பத்திலேயே இருந்தது. இறுதியில் தேர்தல் முடிவுகளும் அப்படித்தானே வந்தன? சில தொகுதிகளில் இரு கழகங்களும் ஒரே வேட்பாளரை ஆதரித்த சூழ்நிலையும் ஏற்பட்டது.