பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மகிழ்ச்சியோடு விசாரிப்பார்கள். “அப்பாவைப் போலவே இருக்கிறீர்களே? (அப்பாவியாக)” என்பாராம் அய்யா!

1967-க்குப் பிறகு அடிக்கடி சந்தித்தேன். “அண்ணா காவியம்” எழுதி முடித்த பிறகு, அய்யாவிடம் மதிப்புரை வாங்க விரும்பினேன். கையெழுத்துப் பிரதியைக் கொண்டு போய்க் கொடுத்து, என்.எஸ். சம்பந்தம் அவர்களை நினைவூட்ட வேண்டினேன். 15-12-72 அன்றையத் தேதியிட்டு, அய்யா அவர்கள், பாராட்டுரை என்ற தலைப்பில், தம் கைப்பட மதிப்புரை எழுதித் தந்தார்கள். “அண்ணா காவியம்” நூலில் அதை அப்படியே பிளாக் செய்து அச்சிட்டுள்ளேன். அதில் ஒரு பகுதியில் அய்யா அவர்கள்...

என்று குறிப்பிடுகிறார்.

அய்யா அவர்களே இப்படிச் சொல்லிவிட்டதனால்தானோ என்னவோ, நான் முதன்முதலாக இந்த உரைநடை நூலை எழுதத் துணிந்தேன்! ஏனெனில், என்னுடைய பூக்காடு, கனியமுது, சுமைதாங்கி, அண்ணா காவியம் ஆகியவை கவிதை நூல்களாகும். இந்த முதலாவது உரைநடை நூலிலும், என்னுடைய நடை என்பதாக எதையும் கையாள இயலவில்லை! அய்யாவைப் பற்றிய நூலாகையாலும் அய்யாவின் உரைகளை அப்படியே எடுத்தாள வேண்டியிருப்பதாலும் நான் எனக்கென ஒரு தனி நடையையோ, கருத்தையோ இங்கு வெளிப்படுத்திவிட வாய்ப்பில்லை.

அண்ணாவோடு நான் பழகியதற்குக் காணிக்கையாகச் சிறுநூலாயினும் முழுநூலாகவும், அண்ணாவுக்கு என் கவிதைகளில் இருந்த ஈடுபாடு, காரணமாகக் கவிதை நூலாகவும் அண்ணா காவியம் இயற்றினேன். கலைஞர் வெளியிட்டார். தமிழகத்துப் பல்துறைச் சான்றோரும் ஆன்றோரும் ஏராளமாக அதைப் பாராட்டி முடித்து விட்டனர்.