பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

24



என் இயல்பின்படி அய்யாவுக்கும் “பெரியார் காவியம்” என்ற கவிதை நூலினைத்தான் இயற்ற எண்ணி, ஓரளவு தொடக்கமும் செய்திருந்தேன். இந்நிலையில் ஓர் நாள், என் நண்பர் மூவேந்தர் அச்சக உரிமையாளர் முத்து, என்னைத் தொலைபேசியில் அழைத்துப் “பெரியார் வரலாற்றை நீங்கள் உரைநடையில் எழுதினால் பொருத்தமாயிருக்குமே! நண்பர் பி.எல். ராஜேந்திரனும் அப்படியே செய்யச் சொல்லி உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். அதையும், இந்தப் பெரியார் நூற்றாண்டு விழா நிறைவிலேயே முடித்தால் நலமாயிருக்கும்” என்றார். இவர்கள் என் நலம் நாடுவோராதலின், தயக்கத்துடனேயே ஒத்துக் கொண்டேன்.

புத்தகத் துறை வித்தகரான என் உழுவலன்பர் ஒருவர் இக்கருத்தை ஆதரித்தார். துணிந்துவிட்டேன். அவர் பல அரிய ஆலோசனைகள் வழங்கினார். அவ்வாறே, வாழ்க்கை வரலாறு பற்றிய பொதுவான சில ஆங்கில நூல்களை உடனே நான் படிக்கத் தொடங்கினேன். ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனோ, விமர்சனக் கண்ணோட்டத்துடனோ நான் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் புகவில்லையாதலால், நான் என்னென்ன படித்தேன் என்பதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் பெரியாரை நான் நன்கு படித்தவன்; என் சகாக்களில் மற்றவர்களைவிட அதிக ஆண்டுகள் அவரோடு வாழ்ந்தவன்; அவர் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக விளங்கியவன் என்ற தகுதியோடு இதை எழுதத் துணிவு பெற்றேன்.

பெரியாரே தன்னுடைய (Autobiography) சுயசரித்திரத்தை எழுதியிருக்க வேண்டும். சிந்திக்கவும், உரையாடவும், சொற்பொழிவாற்றவும், தலையங்கம் தீட்டவும், பயணம் செல்லவுமே அவருக்கு நேரமில்லை. ஓய்வாக அமர்ந்து தன் வாழ்க்கை வரலாறு எழுதிட அவரால் எப்படி இயலும்? 1939-40 ஆண்டுக்குப் பிறகு, பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து எழுதிட, இன்னொரு சாமி சிதம்பரனாரும் உண்டாகவில்லை! சரி, இதுவரையில் வேறு யாரும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு (Biography) எழுதத் தொடங்கவும் இல்லையாதலால் நாமே எழுதுவோம் என்று முடிவெடுத்து விட்டேன். ஆனாலும், திராவிடர் கழகத்தார், அய்யா அவர்களின் நூற்றாண்டு நிறைவில் ஏதாவது, வெளியிடக்கூடுமே என்ற அய்யம் எழுந்தது. அதனால், என் முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்து விடுவோம் என்று கருதி, என் பழைய நண்பர் கி. வீரமணியைச் சந்தித்து, - “தந்தை பெரியார் என்ற தலைப்பில் அய்யாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு - A complete biography of Thanthai Periyar - in prose - எழுதப் போகிறேன். நீங்கள் எழுதுவதானாலும் நான் தடுக்க முடியாது. இந்தத் தலைப்பை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள்-” என்றேன்.