பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 சர்.சி.பி. ராமசாமி அய்யர் துணைவேந்தராக நியமனம் பெறுவதையும் 16.1.53-ல் பெரியார் கண்டித்தார்.

சித்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் பெரியாருக்கு நல்ல வரவேற்பு: தேநீர் விருந்து; பெரியாரின் கருத்துரை கேட்க மக்கள் திரண்டனர். மணியம்மையார் வயிற்று நோயினால் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் நர்சிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டு, ஓர் அறுவை சிகிச்சை மூலம் கட்டி ஒன்று அகற்றப்பட 26.1.53 முதல் இருவாரங்கள் தங்கியிருந்தார். பெரியார் தனியே கூட்டங்களுக்குச் சென்றுவர நேர்ந்தது! இந்த நிலையிலும், ஜனவரி 26 துக்கநாள் என்பதை நினைவூட்டப் பெரியார் மறக்கவில்லை. நாடகமும் சினிமாவும் பொதுமக்கள் வாழ்வில் பெருமளவுக்கு ஊடுருவி, ஒழுக்கத்தையும் முன்னேற்றத்தையும் கெடுக்கின்றன என்ற முறையில் பெரியார் 30.1.53 அன்று “விடுதலை”யில் கட்டுரை தீட்டினார். அதேபோல் 4.2.53 அன்று “புரட்டு! இமாலயப் புரட்டு! அரசியலை மக்கள் முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை. முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். அதுதான் ஜனநாயகம்! என்ன சொல்லுகிறீர்கள்? ஈ.வெ.ரா.” - என்ற ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டார். 1.2.53 சென்னையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில், சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டார் பெரியார். மொழிவாரிப் பிரிவினை என்பது சுத்த சுயநலத்தின் அடிப்படையில் பிறந்ததே! தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் யாவும் ஒரு மொழியே! என்றார் பெரியார். இந்தக் கூட்டத்தில் டி.கே. சண்முகம், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற நடிகர்களும் பங்கேற்றனர்.

1946ல் ராஜகுமாரி திரைப்படத்தில் முதன் முதலாகத் கதாநாயக நடிகர் எம்.ஜி. ராம்சந்தர், வசனகர்த்தா மு.கருணாநிதி. இருவரும் நண்பர்கள். 1953-ல் எம்.ஜி.ஆர். புரட்சி நடிகராகிக் கலைஞரால் தி.மு.கழத்தில் சேர்க்கப்பட்டார். வீரசாகசம் புரிதல், பண்பாளராக நடித்தல் ஆகிய புதிய உத்திகளால் பெருமளவு மக்களைத் தம் ஆதரவாளராக்கி வைத்துக் கொண்டார். 1967, 71. இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். 1972-ல் கழகத்தை நீங்கி அண்ணா தி.மு.க. தொடங்கினார். தி.மு.க.வில் வாய்ப்புக் கிட்டாதென எண்ணியோர் அங்கு விரைந்தனர். தாய்க்கழகத்தை அழித்திடும் நண்டு சிப்பி வேய் கதலிபோல் அ.இ.அ.தி.மு.க. தோன்றி 1971-ல் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிட மாண்புமிகு எம்.ஜி. ராமச்சந்திரன் தமிழக முதல்வரானார். பெரியார் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் மாவட்டம், ஒலி ஒளி நாடகம், விழா முதலியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.