239
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
சர்.சி.பி. ராமசாமி அய்யர் துணைவேந்தராக நியமனம் பெறுவதையும் 16.1.53-ல் பெரியார் கண்டித்தார்.
சித்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் பெரியாருக்கு நல்ல வரவேற்பு: தேநீர் விருந்து; பெரியாரின் கருத்துரை கேட்க மக்கள் திரண்டனர். மணியம்மையார் வயிற்று நோயினால் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் நர்சிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டு, ஓர் அறுவை சிகிச்சை மூலம் கட்டி ஒன்று அகற்றப்பட 26.1.53 முதல் இருவாரங்கள் தங்கியிருந்தார். பெரியார் தனியே கூட்டங்களுக்குச் சென்றுவர நேர்ந்தது! இந்த நிலையிலும், ஜனவரி 26 துக்கநாள் என்பதை நினைவூட்டப் பெரியார் மறக்கவில்லை. நாடகமும் சினிமாவும் பொதுமக்கள் வாழ்வில் பெருமளவுக்கு ஊடுருவி, ஒழுக்கத்தையும் முன்னேற்றத்தையும் கெடுக்கின்றன என்ற முறையில் பெரியார் 30.1.53 அன்று “விடுதலை”யில் கட்டுரை தீட்டினார். அதேபோல் 4.2.53 அன்று “புரட்டு! இமாலயப் புரட்டு! அரசியலை மக்கள் முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை. முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். அதுதான் ஜனநாயகம்! என்ன சொல்லுகிறீர்கள்? ஈ.வெ.ரா.” - என்ற ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டார். 1.2.53 சென்னையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில், சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டார் பெரியார். மொழிவாரிப் பிரிவினை என்பது சுத்த சுயநலத்தின் அடிப்படையில் பிறந்ததே! தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் யாவும் ஒரு மொழியே! என்றார் பெரியார். இந்தக் கூட்டத்தில் டி.கே. சண்முகம், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற நடிகர்களும் பங்கேற்றனர்.