பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

260




சீனாவில் சன்யாட்சென் தோன்றினார். மாறுதலை உண்டு பண்ணினார். ஐரோப்பாவின் நோயாளி என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால்பாட்சா தோன்றி மாறுதலை ஏற்படுத்தினார்! ஆனால் தமிழ் நாட்டில் சித்தர்களும் புத்தரும் வள்ளுவரும் தோன்றிச் சாதி ஒழிய வேண்டும் மாறுதல் வேண்டும் என்று கூறியும், மாறுதல் காண முடியவில்லையே!

அது போகட்டும்! நம் தாய் நாட்டுக்குத் தமிழ் நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை; கோயிலில், வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; சாஸ்திரம், புராணம் எல்லாமே வடமொழியில்! இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்! சங்கீதம் தெலுங்கில்தான் வரும், தமிழில் வராது!

நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! அதற்காகப் பாடுபடுபவர்களுக்கு உதவியாக இருங்கள்! என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் சாதி ஒழிப்பேயாகும்! என்று மலேயா நாட்டில் முதல் கட்டமாகக் கோலப்பிறை செயிண்ட் மார்க் பள்ளித் திடலில், 1954-டிசம்பர் 16-ஆம் நாள், பெரியார் சொற்பெருக்காற்றினார். பினாங்கு நகரிலிருந்து வெளிவரும் சேவிகா இதழ் இதனை வெளியிட்டிருந்தது.