பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தயாராகப் படுக்கையுடன்தான் நீதிமன்றம் நோக்கிச் சென்றார். இலட்சியத்தைச் சாதாரணமாக அடைய முடியாது: தக்க விலை கொடுக்கத்தான் வேண்டும் என்பது பெரியாரின் தத்துவமன்றோ?

நீதிபதிகள் அனுமதியுடன் சுமார் 1 மணி நேரம் பெரியார் தமது அறிக்கையைப் படித்தார். (நீதி கெட்டது யாரால்? என்ற 128 பக்கமுள்ள நூலாக அது வெளியாகியுள்ளது) நீதிக்காகப் போராடும் உரிமை முழக்கம் என்றே அதனைக் குறிப்பிட வேண்டும். பெரியாரின் உரத்த குரலில் ஒலித்த அறிக்கையை, நீதிபதிகள் கவனமாகச் செவிமடுத்தனர். பெரியாருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மணியம்மையாரை எச்சரித்து விடுவித்தனர். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கப் பொது மக்களுக்கு உரிமையுண்டு, என்ற கருத்தையும் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

“பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்டமுடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன ஐ.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ். ஏ.வெங்கட்ராமன், எஸ். ஓய்.கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கிலெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதியமாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா ? இல்லை காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆண்டு காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்! எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா? என்றால், ஆமாம்! வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது! இதுபோலவேதான், பார்ப்பனர்கள் தன்மை! இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண்டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன் சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் “சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன்” - பெரியாரின் நியாயக் கோரிக்கைச் சாசனத்தின் சில பகுதிகள் இவை!