பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

288



இந்த முடிவு வெளியாகும் முன்பே, 18.4.1957 அன்று திருச்சியில் கூடிய மத்திய செயற்குழுவில், சாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் ஒரு கூறாக, 5.5.57 முதல், பார்ப்பனர் ஓட்டல்களின் முன்புறப் பலகைகளில் உள்ள பிராமணாள் என்ற எழுத்துக்களை அழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு முன்னோட்டமாகப் பெரியார் அவர்கள் சென்னை ஆட்சியாளருக்கும், கவர்னருக்கும் ஒரு கடிதம் எழுதி, 27.4.57 “விடுதலை”யில் அதை வெளியிடச் செய்தார். அதில், தமது நோக்கம் சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்படவேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளில் கூடச் சாதியைக் காட்டக் கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டி, சாதிப்பிரிவு என்பது, நம் நாட்டில் அனுபவப் பூர்வமாகப், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற இரண்டுக்குள் அடங்கிவிடுவதாக உதாரணத்துடன் விளக்கினார். சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக்கொண்டாலும், பிராமணாள் இவர்களையும் சூத்திராள் என்றுதான் கருதுகிறார்கள் - “தெரிந்தோ தெரியாமலோ பிராமணாள் விடுதி என்று உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து வருகிறது. பார்ப்பனர் வீடு என்று அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் போட்டுக் கொள்ளட்டும். அரசு அனுமதியோடு, மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும், ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகட்கு முன்பே நான் சில நகரசபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு, நகரசபை இதில் தலையிடக் கூடாதென்று. பிறகு ரயில்வேயுடன் போராடி, அங்கிருந்த பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடுமிடம் ஆகியவற்றை எடுக்க செய்தேன். எனவே அருள் கூர்ந்து, 5.5.57க்குள் அமுலுக்கு வருமாறு, ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் பிராமணாளை அகற்றி விட்டால் நேரடி நடவடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய அவசியமிருக்காது, என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடிவடைந்தது பெரியார் கடிதம்.

‘பிராமணாள்’ அழிப்புக்கிளர்ச்சி ஏன்? என்ற தலைப்பில் பெரியார், 28.4.57 “விடுதலை” ஏட்டில் ஒரு விளக்கமான அறிக்கையினையும் வெளியிட்டார். எதற்கும் பதிலோ நடவடிக்கையோ காணப் பெறாமையால், திட்டமிட்டபடி, 5.5.57 அன்று, சென்னை திருவல்லிக்கேணி, பைக்ராஃப்ட்ஸ் சாலையிலுள்ள முரளி கஃபே என்ற பார்ப்பனர் உணவு விடுதியைக் களமாகத் தேர்ந்தெடுத்துப், போராட்டம் தொடங்கியது. முதல் நாள் கணக்கற்ற மக்கள் கூட்டம். கடையின் முன்னர் மறியல் செய்து, பிராமணாள் என்ற எழுத்துக்களை அழித்திட, ஈ.வெ.ரா மணியம்மையார், விசாலாட்சியம்மாள். மனோரஞ்சிதம் அம்மாள், எஸ்.குருசாமி, எம். கே.டி. சுப்பிரமணியம், மு.பொ. வீரன், டி.எம். சண்முகம், திருவாரூர் தங்கராசு. ஏ.பி.