39
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
கோவை மாவட்டத்தின் பெருங்குடி மக்களாகிய கொங்கு வேளாளர் சமூகத்திடையே, செல்வாக்கும் நல்ல மரியாதையும் பெற்றுத் திகழ்ந்தார் வெங்கட்ட நாயக்கர். பல அறக்கட்டளைகள், கல்விச் சாலைகள், மருத்துவ நிலையங்கள் நிறுவினார். திரண்ட செல்வத்தில் புரண்டெழுந்த போதிலும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதை மறப்பதில்லை. வீட்டில் எந்த நேரமும் புராண கதாகாலட்சேபங்கள், பஜனைப் பாடல்கள், வைணவ சமயத் தத்துவ விசாரணைகள் இத்யாதி, இத்யாதி....
கிருஷ்ணசாமியும் இராமசாமியும் முறைப்படி பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூத்தபிள்ளை பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாய், நல்ல வைணவ சிரோமணியாய், நெற்றியில் நாமம் துலங்கப், பயபக்தியுடன் பள்ளி சென்றுவந்தார். அங்கு கிடைத்த கல்வியின் எல்லைவரை சென்ற பின்பும், அத்துடன் விடாது, தனியே தமிழ், ஆங்கிலம், வடமொழி, பக்தி மார்க்க நூல்கள், சித்த மருத்துவ நூல்கள் யாவும் விரும்பிப் பயின்றார்.